இனி பெண்களின் திருமண வயது 16- சட்டம் கொண்டு வருகிறது வங்கதேசம்
டாக்கா: வங்காளதேசத்தில் பெண்களின் திருமண வயதினை குறைப்பதற்கு அநாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி வங்காளதேசத்தில்தான் 15 வயதுக்குட்பட்ட பெண்களில் 20 சதவிகிதத்தினர் திருமணம் செய்து தரப்படுகின்றனர்.
இங்குள்ள பெண்களின் நிலையை புதிய விதமான அடிமைத்தனம் என்று தொண்டு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
சார்ந்து வாழும் நிலைமை:
இந்தப் பெண்கள் சம்பாதிக்காவிடில் அவர்களை ஒரு சுமையாகவே குடும்பத்தினர் கருதுகின்றனர் என்றும், தங்களின் தேவைகள், பாதுகாப்பு மற்றும் வரதட்சணை போன்றவற்றிற்கு அவர்கள் குடும்பத்தினரை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்றும் இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
சிறுவயதுத் திருமணம்:
இதனால் சிறுவயதுத் திருமணம் என்பது அங்கு அதிக அளவில் காணப்படுகின்றது.
அமைச்சரவை முடிவு:
இந்த நடைமுறையை ஒழிப்பதற்காக ஆண்களுக்கான திருமண வயதை 21லிருந்து 18ஆகவும், பெண்களுக்கான வயதை 18லிருந்து 16ஆகவும் மாற்ற அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அபராதம் உயர்த்தப்படும்:
மேலும் இதற்குக் குறைந்த வயதில் திருமணம் செய்து கொடுத்து, விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை 130 டாலரிலிருந்து ஐந்து மடங்காக உயர்த்தப்படுகின்றது. அதாவது சுமார் 8,000 ரூபாய் ஆகும்.
இரண்டு வருடம் சிறைதண்டனை:
அதுதவிர இந்தக் குற்றத்திற்கான சிறைத்தண்டனை இரண்டு மாதத்திலிருந்து இரண்டு வருடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தண்டனை இல்லை:
வயது குறைவான பெண்களைத் திருமணம் செய்துகொள்ளுபவர்களும், இத்தகைய திருமணத்தை நடத்தி வைப்பவர்களும், பெற்றோர்களுமே தண்டனைக்கு உள்ளாவார்களே தவிர இந்தத் திருமணத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவை செயலாளரான முகமது முஷாரப் ஹோசைன் புயான் தெரிவித்தார்.
குழந்தைத் திருமணம் தடுப்பு:
வங்காளதேசத்தின் கிராமப்புறப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க இத்தகைய சட்டங்கள் உதவி புரியக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.