சாது மிரண்டால் காடு கொள்ளாது.. லாஸ் வேகாஸ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் தமிழ் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நேற்று நடைபெற்றது
லாஸ் வேகாஸ்: ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. அதற்கான போராட்டம் தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த வேளையில் உலகத் தமிழர்களின் ஆதரவு கைகளும் தமிழ்நாட்டை நோக்கி நீண்டு கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், லாஸ் வேகாஸ் தமிழ் சங்கம் சார்பாக நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தியுள்ளது. போராட்டத்தின் போது, "தூரத்தால் நாங்கள் விலகி இருந்தாலும் தமிழ் உணர்வால் நாங்கள் தமிழகத்தில் உரிமைக்காக போராடும் மாணவர்களுடன் நெருங்கி இருக்கிறோம் என்று லாஸ் வேகாஸ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடந்திட அவசர சட்ட திருத்தம் தேவை இல்லை என்றும் மாறாக அவசரமாக சட்ட திருத்தம் வேண்டும் என்றும் அவர்கள் லாஸ் வேகாஸ் தமிழ் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தமிழர்கள் ஆகிய நாங்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள், முறையாக கேட்டால் உயிரையும் கொடுப்பவர்கள். ஆனால் எங்கள் பண்பாட்டிற்கோ, கலாச்சாரத்திற்கோ, பாரம்பரியத்திற்கோ கேடு விளைவிக்க நினைத்தால் பொங்கி எழுவோம். சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்று லாஸ் வேகாஸ் தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது.