மோடி அமெரிக்காவுக்கு வரட்டும்: போராட தயாராகும் எதிர்ப்பாளர்கள்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வரும்போது அவருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்த பல அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
பிரதமர் நரேதிர மோடி அமெரிக்கா வருகையில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த மோடிக்கு எதிரான அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அண்மையில் துவங்கப்பட்ட அலையன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அன்ட் அகவுண்டபிளிட்டி(ஏஜெஏ) அமைப்பு மோடி வரும் 28ம் தேதி நியூயார்க், மான்ஹாட்டனில் இருக்கும் மேடிசன் ஸ்கொயர் கார்டனுக்கு வருகையில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளது.
சிக் ஃபார் ஜஸ்டிஸ்(எஸ்எப்ஜே) என்ற அமைப்பு வரும் 30ம் தேதி மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கும்போது வெள்ளை மாளிகைக்கு எதிராக உள்ள பூங்காவில் போலி நீதிமன்ற கூடு அமைத்து குஜராத் கலவரம் தொடர்பாக அவர் மீது குற்றம்சாட்ட உள்ளது.
மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய-அமெரிக்கர்களுக்கு ஏஜெஏ அமைப்பு ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்துள்ளது. ஏஜெஏ அமைப்பில் பெரும்பாலும் இந்திய-அமெரிக்க நிறுவனங்கள், தனிநபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவருக்கு அமெரிக்கா விசா வழங்கக் கூடாது என்று கூறி பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்க இந்தியர்கள் தயாராகி வருகிறார்கள்.