கடைக்குள் புகுந்து கருப்பின வியாபாரியை சுட்டுக் கொன்ற யு.எஸ் போலீஸ்... போராட்டத்தில் குதித்த மக்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவரை அவரது கடையில் புகுந்து போலீசார் அதிரடியாக சுட்டுக் கொலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், கடை ஒன்றின் வாசலில் கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங் (37) என்பவர் சி.டி. விற்பனை செய்துவந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஆல்டனை திடீரென போலீசார் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். ஆல்டனை சுட்டுக்கொன்றதும் அவரது பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை போலீசார் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகப் பரவியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கருப்பினர்களுக்கு எதிராக போலீசார் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக கண்டனங்கள் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்தில் ஏராளமானோர் கூடி தங்கள் அஞ்சலியை செலுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஆல்டன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என நீதித்துறை தெரிவித்துள்ளது.