புதுக்கோட்டையில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள்.. ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு
புதுக்கோட்டையில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் வேலை கஷ்டமாக இருப்பதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
துபாய்: புதுக்கோட்டையில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் வேலை கஷ்டமாக இருப்பதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் பிள்ளையப்பட்டி, காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாயில் உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு கொத்தனார் வேலைக்கு வந்தனர்.
இந்த நிறுவனத்தை மேலூர், வடகம் பட்டியைச் சேர்ந்த சேவுகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த வேலைக்காக இருவரும் தலா 70,000 ரூபாயை கட்டினர்.
கஷ்டமாக இருந்த வேலை
இவர்களது வேலையுடன் கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்களால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியவில்லை.
அடித்து துன்புறுத்தினர்
எனவே நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கஷ்டமாக இருக்கிறது. எங்களை ஊருக்கு திரும்பி அனுப்பி வையுங்கள் என கேட்டனர். ஊருக்கெல்லாம் அனுப்ப முடியாது என கூறி விட்டு, அவர்களை அடித்து வேலைக்கு அனுப்பினர்.
கலெக்டரிடம் புகார்
இந்த தகவலை சொந்த ஊரில் உள்ள தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
ஓடிவிட்டனர் என புகார்
இந்த புகாரை தொடர்ந்து துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர். ஆனால் கம்பெனி நிர்வாகம் இரண்டு பேரும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஓடிவிட்டனர் என புகார் அளித்துள்ளனர்.
மூன்று மாதங்களாக
மேலும் இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கும் போது அதற்கான பதில் அளிப்பதில்லை. இதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் வெளியில் உள்ள நண்பர்களின் உதவியுடன் வசித்து வருகின்றனர்.
நடையாய் நடந்து வருகின்றனர்
மேலும் உணவுக்காகவும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருவரும் போலீஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகம் என பல்வேறு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து வருகின்றனர். எனவே தங்களை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவுமாறு இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.