குவைத் சிறையில் தமிழர் மரணம்... உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் உறவினர்கள்
குவைத்: குவைத் சிறையில் உயிரிழந்த தமிழரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இந்திய வெளியுறவுத்துறையின் உதவியையும் நாடியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான்(40) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக குவைத் நாட்டிற்கு ஷாஜகான் சென்றுள்ளார். பின்னர், வேலைக்கு சென்ற சில வருடங்களிலேயே அவர், ஏதோ சில காரணங்களால் கைது செய்யப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த அவர், கடந்த ஓராண்டுக்கு மேலாக கல் அடைப்பு ஏற்பட்டு வலியால் மிகவும் பாதிக்கப்பட்டார். 4 மாதங்களுக்கு முன்பு கல் அடைப்பை அகற்ற ஷாஜகானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை திடீரென மயக்கமடைந்த ஷாஜகான், சிறிது நேரத்தில் சிறையிலேயே உயிரிழந்தார் என கூறப்படுகிறது. ஷாஜகான் இறந்த செய்திகூட தங்களுக்கு தெரிவிக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது ஷாஜகானின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.