துபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள்.. ஈமான் அமைப்பின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!
துபாய் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள் ஈமான் அமைப்பின் முயற்சியால் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
துபாய் : துபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள் ஈமான் அமைப்பின் முயற்சியால் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
துபாயில் உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு புதுக்கோட்டை, பிள்ளையப்பட்டி, காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொத்தனார் வேலைக்கு வந்தனர்.
இந்த நிறுவனத்தை மேலூர், வடகம் பட்டியைச் சேர்ந்த சேவுகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த வேலைக்காக இருவரும் தலா 70,000 ரூபாயை கட்டினர். இவர்களது வேலையுடன் கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் கொடுக்கப்பட்டது.
இதனால் அவர்களால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியவில்லை. எனவே நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கஷ்டமாக இருக்கிறது. எங்களை ஊருக்கு திரும்பி அனுப்பி வையுங்கள் என கேட்டனர். ஊருக்கெல்லாம் அனுப்ப முடியாது என கூறி விட்டு, அவர்களை அடித்து வேலைக்கு அனுப்பினர்.
இந்த தகவலை சொந்த ஊரில் உள்ள தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.
ஆனால் கம்பெனி நிர்வாகம் இரண்டு பேரும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஓடிவிட்டனர் என புகார் அளித்துள்ளனர். மேலும் இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கும் போது அதற்கான பதில் அளிப்பதில்லை என்றும் கூறப்பட்டது.
இதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் வெளியில் உள்ள நண்பர்களின் உதவியுடன் வசித்து வந்தனர். மேலும் உணவுக்காகவும் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
இருவரும் போலீஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகம் என பல்வேறு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து புகார் தெரிவித்தனர்.மேலும் தங்களை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவுமாறு இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைகாத நிலையில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து துபாயில் உள்ள அல் வஹா நிறுவனத்தின் நிறுவன தலைவர் புதுக்கோட்டை அல்ஹாஜ் ஷர்புதீன் மூலம் அவர்கள் வேலை பார்த்து வந்த நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் அவர்களது விசா ரத்து செய்யப்பட்டு 25.05.2018 நேற்று மாலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த இரண்டு இளைஞர்களும் துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், அல் வஹா நிறுவன அதிபர் புதுக்கோட்டை ஷர்புதீன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.