பாக். பின்வாங்க கூடாது.. இந்தியா நன்றாக அனுபவிக்கட்டும்.. தீவிரவாதி மசூத் அசார் பகீர் ஆடியோ
இந்தியாவிற்கு காஷ்மீர் இளைஞர்களே சரியாக பதிலடி கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள் என்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் ஆடியோ வெளியிட்டு இருக்கிறான்.
இஸ்லாமாபாத்: காஷ்மீரில் இந்தியா ராணுவம் செய்த காரியங்களுக்கான பதிலடியை காஷ்மீர் இளைஞர்களே கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள் என்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் ஆடியோ வெளியிட்டு இருக்கிறான்.
காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
இந்த நிலையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இந்த ஆடியோவில் உண்மைத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. இந்த ஆடியோ மொத்தம் 8 நிமிடங்கள் இருக்கிறது,
என்ன ஆடியோ
மசூத் அசார் அந்த ஆடியோவில் பேசுகையில், காஷ்மீர் விடுதலை போராட்டத்திற்கு வெளிநாடுகளின் உதவி தேவையில்லை. இந்த தாக்குதல் இந்தியாவில் உள்ள காஷ்மீரில் நடந்தது . பாகிஸ்தான் எல்லையில் நடக்கவில்லை. இதை நடத்தியதே எங்கள் அமைப்பின் காஷ்மீர் இளைஞர் ஒருவர்தான். இதனால் பாகிஸ்தான் மீது பழியை போட கூடாது.
இந்தியா மிரட்டல்
பாகிஸ்தான் இந்தியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிய கூடாது. இந்தியாவின் மோசமான கொள்கையால், காஷ்மீரி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். ஆனால் பாகிஸ்தான் மீது இந்தியா பழி போட பார்க்கிறது. ஆனால் இந்த முறை இந்தியாவின் பழி போடும் பேச்சை ஐரோப்பா, சீனா போன்ற நாடுகள் கேட்கவில்லை.
பாகிஸ்தான்
இம்ரான் கான் மோடிக்கு முன் அடிபணிய கூடாது. அப்படி நடந்தால் மோடி மீண்டும் பலம் பெறுவார். பாகிஸ்தான் வலுவாக இருந்தால், மோடி இன்னும் பல அடிகள் பின்னோக்கி செல்வார். இது இந்த பிராந்தியத்தில் நாம் மீண்டும் பலம் பெற உதவும்.
அடிபணிய கூடாது
இந்த தாக்குதல் தேர்தலில் மோடிக்கு பலம் அளிக்கும் என்கிறார்கள். அவர்களுக்கு ஹிந்துக்களின் மனநிலை பிறநாடுகளுக்கு தெரியவில்லை. இதனால் மோடி மீதான நம்பிக்கை இந்தியாவில் பெரிதாக சரிந்து இருக்கிறது. அவர் காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழித்ததாக கூறியது எல்லாம் பொய் என்று அம்பலம் ஆகி உள்ளது. அதன் விளைவுதான் இந்த தாக்குதலும், என்று அந்த ஆடியோவில் மசூத் குறிப்பிட்டு இருக்கிறான்.