ஆம்.. ஜெய்ஷ் இ முகமதுதான் புல்வாமாவில் தாக்கியது.. கொடூர தாக்குதல் பற்றி முஷாரப் பரபர பேட்டி!
புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
இஸ்லாமாபாத்: புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விளக்கம் அளித்து இருந்தார்.
தற்போது இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான பல உண்மைகளை அவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டியாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மோடி அக்கறை
முஷாரப் தனது பேட்டியில், மோடிக்கு இந்திய வீரர்கள் மீது உண்மையான அக்கறை கிடையாது. அவர் நன்றாக நடிக்கிறார். பாகிஸ்தான் மீது தேவையில்லாமல் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்தியா பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது என்பதே மிகப்பெரிய பொய். இது போன்ற பொய்களை பரப்ப வேண்டாம்.
வருத்தம்
புல்வாமா தாக்குதல் மிகவும் வருந்ததக்க விஷயம். மிக மோசமான விஷயம் அது. அதில் சந்தேகமே இல்லை. நான் சொல்கிறேன் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கருணையே காட்ட கூடாது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீதும், மசூத் அசார் மீதும் கொஞ்சம் கூட கருணை காட்ட கூடாது.
யார் செய்தது
அதே சமயம் இதில் பாகிஸ்தான் மீதும் குற்றஞ்சாட்ட கூடாது. பாகிஸ்தானுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாகிஸ்தான் அரசு இதில் தலையிடவில்லை. இந்தியா மிக மிக தவறாக பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான். அவர்கள் என்னையே கொல்ல பார்த்தவர்கள்.
பாகிஸ்தான் பிரச்சனை
இந்தியா இதை முதலில் நிறுத்த வேண்டும். இந்தியாதான் பாகிஸ்தானை இரண்டாக துண்டாடியது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று இந்தியா இப்படி செய்கிறது. ஆனால் இதனால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. இந்தியா தனது நிலையை மாற்ற வேண்டும்., என்று முஷாரப் தெரிவித்துள்ளார்.