பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்!
இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய் குட்டி பிறந்த விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
ரோம்: இத்தாலியில் பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் மலோசி. விவசாயியான இவர் தனது மைத்துனருடன் சேர்ந்து, சர்தினியா தீவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார்.
அந்தப் பண்ணையில் கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் பெயர் ஸ்பெலாச்சியா. கருவுற்று இருந்த ஸ்பெலாச்சியா கடந்த 9ம் தேதி ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்தது.
இதில் என்ன ஆச்சரியம் என கேட்குறீர்களா? இந்த ஐந்து குட்டிகளில் ஒரு குட்டி பச்சை நிறத்தில் பிறந்திருக்கிறது. பொதுவாக பச்சை நிறத்தில் நாய்களை பார்ப்பது மிகவும் அரிதானது. எனவே ஸ்பெலாச்சியாவின் இந்த பச்சை நிற நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பச்சை நிற நாய் குட்டிக்கு பிசாட்சோ என பெயர் சூட்டியுள்ளார் கிறிஸ்டின். அதாவது பிஸ்தா நிறத்தை குறிக்கும் வகையில் நாய் குட்டிக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த கொடிய கொரோனா காலத்தில், பச்சை நிறம் என்பது நம்பிக்கையையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் நிறமாக தான் கருதுவதாக விவசாயி கிறிஸ்டின் மலோசி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.