துருக்கி மீதான பொருளாதார தடைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் ஒப்புதல் !
மாஸ்கோ: தங்கள் நாட்டு எல்லைக்குள் ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததாக கூறி துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு எதிராக அந்நாட்டு மீது ரஷ்யா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதற்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய நாட்டு போர் விமானம் ஒன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த துருக்கி, எங்கள் நாட்டு எல்லைக்குள் எந்த நாட்டு விமானம் அத்துமீறி நுழைந்தாலும், சுட்டு வீழ்த்துவோம் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் கடும் கோபத்தில் இருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, துரோகிகள் முதுகில் குத்தி விட்டனர். ரஷ்ய விமானம் சிரியா எல்லைக்குள் பறந்த போதே, துருக்கி ராணுவத்தினர் சர்வதேச சட்டத்தை மீறி, விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளனர்'
பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்தி வரும் வேளையில் இந்த சம்பவம் துருக்கி - ரஷ்ய இடையேயான உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சம்பவம் பற்றி கவனத்துடன் ஆராயப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. எனத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றியது.
இந்நிலையில், துருக்கி நாட்டுக்கு எதிராக, ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சில நாட்களுக்கு முன்னர் பல பொருளாதார தடைகளை அதிரடியாக அறிவித்தார். டிமிட்ரி வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்ய பிராந்தியத்தில் செயல்பட்டு வரும், துருக்கியின் அனைத்து பொருளாதார கட்டமைப்புகள் மீதும் தடை விதிக்கப்படுகிறது. அந்நாட்டுக்கு சப்ளை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தடை செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து துருக்கி மீதான பொருளாதாரத் தடைக்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய நாட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி துருக்கி மீது தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி துருக்கி நாட்டினரை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரஷ்யாவில் புதிதாக வேலைக்கு அமர்த்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் தற்போது பணியில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் இருந்து தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால் இருநாட்டு உறவுமுறையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.