சிரியாவில் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் ஏவுகணையை களமிறக்கிய ரஷ்யா
டமாஸ்கஸ்: சிரியாவில் 3,000 கி.மீ. தொலைவு பாய்ந்து சென்று இலக்கை அழிக்கும் அதிநவீன ஏவுகணையை ரஷ்யா களமிறக்கியுள்ளது. இதுவரை அமெரிக்காதான் இத்தகைய ஏவுகணைகளை பயன்படுத்தியது. தற்போது உலகின் 2வது நாடாக ரஷ்யாவும் இத்தகைய ஏவுகணைகளை போர்க்களத்துக்கு கொண்டு வந்துள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்தை எதிர்க்கும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ரஷ்யா களமிறங்கியது. ரஷ்யாவின் முதல் இலக்காக இருந்தது அமெரிக்கா ஆதரவுடன் செயல்பட்டு வந்த கிளர்ச்சிக் குழுக்கள் மீதுதான்.
கடந்த 2 மாத காலமாக இந்த குழுக்கள் மீது அதிரடி விமானத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வந்தது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிருப்தி அடையச் செய்தன.
உலகின் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மீது இலக்கு வைத்தும் ரஷ்யா தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் அந்நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில்தான் 1,700 மைல்கள் அதாவது 2,735 கி.மீ. தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை அழிக்கும் வல்லமை கொண்ட அதிநவீன ஏவுகணைகளை சிரியாவுக்குள் களமிறக்கியுள்ளது ரஷ்யா.
ரஷ்யாவின் இலக்கு இனி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளாகத்தான் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஏவுகணைகள் இறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாரீஸ் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் ரஷ்யாவும் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக உக்கிரத் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளன.
இந்த வியூகத்துக்கு இத்தகைய அதிநவீன ஏவுகணைகள் கை கொடுக்கும் என்பது ரஷ்யாவின் நம்பிக்கை. உலகில் அமெரிக்காவிடம் மட்டுமே இத்தகைய ஏவுகணைகள் இருந்து வந்த நிலையில் 2வது நாடாக ரஷ்யாவும் இவற்றை களமிறக்கியுள்ளது.