எபோலாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டோமே: ரஷ்ய அதிபர் புதின்
மாஸ்கோ: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்ட எபோலா வைரஸ் காய்ச்சலுக்கு தங்கள் நாட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கானோரை எபோலா வைரஸ் தாக்கியது. எபோலா வைரஸ் தாக்கியதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். எபோலாவுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட மருந்துகள் சரியாக வேலை செய்யவில்லை. இந்நிலையில் எபோலாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய அவர் அதன் பெயர், அது எப்படி வேலை செய்கிறது, யார் கண்டுபிடித்தது, பரிசோதனை செய்த முறை என்று எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியில் தனது அறிவிப்புகள் வரும்படி பார்த்துக் கொள்வதில் புதின் வல்லவர் என்று பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.