முதலில் விஷ தாக்குதல்... இப்போது கைது... இறுகும் பிடி.. சிக்கலில் நவல்னி
மாஸ்கோ: கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சொந்த நாட்டிற்குத் திரும்பியபோது, அந்நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் அலெக்ஸி நவல்னி. தீவிர புடின் எதிர்ப்பாளராக அறியப்படும் இவர், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சைபீரியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
முதலில் அவருக்கு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரகு உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காகத் தனி விமானம் மூலம் அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
நவல்னிக்கு விஷம்
கடந்த ஆறு மாதங்களாக ஜெர்மனியிலேயே அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இடையில் அவரது உடல்நிலை கோமா நிலைக்கும் சென்றது. தொடர் தீவிர சிகிச்சைக்குப் பின், அவரது உடல்நிலை மெல்ல முன்னேறியது. நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு வகை ரசாயன விஷம் நவல்னிக்கு அளிக்கப்பட்டதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர்.
ரஷ்யா திரும்பும் நவல்னி
ஆனால், இத்தகவலை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது. இந்தச் சூழ்நிலையில், நவல்னி நேற்று ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பினார். தன்னை கொல்ல முயன்றவர் புடின் என்று குற்றஞ்சாட்டிய நவல்னி, தான் ரஷ்யா திரும்புவதைத் தடுக்க புடின் பல்வேறு முயற்சிகளை எடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
விமானத்தில் கோளாறு
இந்தச் சூழ்நிலையில், நவல்னி நேற்று ஜெர்மனி நாட்டிலிருந்து ரஷ்யா திரும்பினார். அவருடன் செய்தியாளர்கள் பலரும் பயணித்தனர். அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் திட்டமிட்டிருந்த வுனுகோவோ விமான நிலையத்திற்குப் பதிலாக ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் கைது
விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில், ரஷ்ய காவல் துறையினர் அவரை கைது செய்தனர். கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முதல் பல்வேறு வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக தவறியதாலேயே அவர் கைது செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. நவல்னியை சந்திக்க அவரது வழக்கறிஞர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இது தவிர நன்கொடையாக வந்த சுமார் 40 லட்சம் டாலரை நவல்னி சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார் எனக் குற்றஞ்சாட்டி, அது தொடர்பான விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளது.
போலீஸ் குவிப்பு
அலெக்ஸி நவல்னி சுமார் ஆறு மாதங்களுக்குப் பின் ரஷ்யா திரும்புவதால் அவரை வரவேற்க ஆயிரணக்கனக்கான ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். மேலும், பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க, பாதுகாப்புக்காகக் கூடுதலாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். சில இடங்களில் காவல் துறையினருக்கும் நவல்னி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டன.