என்னை கொல்ல உத்தரவிட்டவர் புடின்... நான் நாடு திரும்புவது உறுதி... பாயும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்
மாஸ்கோ: தன்னை கொல்ல உத்தரவிட்டவர் ரஷ்ய அதிபர் புடின் என்று குற்றஞ்சாட்டியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் நவல்னி, வரும் ஜனவரி 17ஆம் தேதி ரஷ்யா திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சைபீரியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு விமானம் மூலம் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து, அவர் உயர் சிகிச்சைக்காகத் தனி விமானம் மூலம் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம்
சிகிச்சையின்போது கோமா நிலைக்கும்கூட நவல்னியின் உடல்நிலை சென்றது. தொடர் தீவிர சிகிச்சைக்குப் பின், அவர் கோமாவில் இருந்து மீண்டார். முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னிக்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோவிச்சோக் வகையைச் சேர்ந்த ஒரு ரசாயன விஷம் அளிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி ராணுவம் உள்ளிட்ட பலரும் குற்றஞ்சாட்டினர்.
ரஷ்யா திரும்பும் நவல்னி
இருப்பினும், ரஷ்யா அரசு இத்தகவலை முற்றிலுமாக மறுத்தது. நவல்னி உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும் தங்களும் எவ்வித தொடர்பும் இல்லை என ரஷ்ய தொடர்ந்து கூறிவருகிறது. 44 வயதாகும் நவல்னி, தற்போது ஜெர்மனியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நவல்னி வரும் ஜனவரி 17ஆம் தேதி ரஷ்யா திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.
என்னைக் கொல்ல முயன்றவர் புடின்
இது குறித்து நவல்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் ரஷ்யா திரும்புவேனா என்ற கேள்வி தற்போது நிலவுகிறது. நான் ரஷ்யாவை விட்டு ஒருபோதும் வெளியேறவில்லை. அவர்கள் என்னைக் கொல்ல முயன்றனர் அந்த ஒரே காரணத்திற்கு நான் ஜெர்மனி அழைத்து வரப்பட்டேன். இருப்பினும், என்னை கொல்ல நடைபெற்ற முயற்சியில் இருந்து நான் பிழைத்துவிட்டேன். என்னைக் கொலை செய்ய உத்தரவிட்ட புடின், இப்போது நான் நாடு திரும்பாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய உத்தரவிட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
விசாரணை
நன்கொடையாக வந்த சுமார் 40 லட்சம் டாலரை நவல்னி சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார் எனக் குற்றஞ்சாட்டி ரஷ்யா, அவர் மீது விசாரணை நடத்தியது. மேலும், மாஸ்கோ நீதிமன்றத்திலும் நவல்னி மீது பல்வேறு வழக்கு தொடரப்பட்டுள்ளன. தான் ரஷ்யா திரும்பக் கூடாது என்பதற்காக இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ள நவல்னி, இதற்கெல்லாம் பயப்படப்போவதில்லை என்றும் தான் ரஷ்யா திரும்புவது உறுதி என்றும் தெரிவித்தார்.