10 நாள் லீவிலிருந்து திரும்பி வந்த "ரஷ்யாவின் ராகுல் காந்தி"!
செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா: நம்ம ஊர் ராகுல் காந்தி போல திடீரென காணாமல் போய் விட்ட ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் மீண்டும் வெளியே வந்துள்ளார். தன்னைப் பற்றி கிளம்பிய வதந்திகள் குறித்து கேட்டபோது அவர் சிரிப்பையே பதிலாகக் கொடுத்தார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சில வார விடுமுறையில் போனாலும் போனார், ஆளாளுக்கு அவரது தலையைப் பிடித்து ஆயத் தொடங்கி விட்டனர் இந்தியாவில். இதேபோல ரஷ்யாவிலும் அதிபர் புடின் திடீரென காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்பது தெரியாமல் அனைவரும் குழம்ப ஆரம்பித்து விட்டனர். வதந்திகளும் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.
அவரது உடல் நிலை சரியில்லை என்றும் செய்திகள் கிளம்பின. கடந்த 10 நாட்களாக இதே பரபரப்புதான். புடின் இறந்து போய் விட்டதாக கூட சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் இன்று அவர் திடீரென திரும்பி வந்தார். #PutinDead என்பது டிரண்ட் ஆனது.
இந்த நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தோன்றினார் புடின். அவரைப் பார்த்தால் உடல் நலம் குன்றியவர் போலவே தெரியவில்லை. அந்த அளவுக்கு இயல்பாகவே அவர் காணப்பட்டார். அங்கு கிர்கிஸ்தான் அதிபர அல்மஸ்பக் அடம்படயேவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தன்னைப் பற்றி கேட்கப்பட்ட வதந்திகள் குறித்த கேள்விகளுக்கும் அவர் கோபமே படாமல் சிரித்தபடி, வதந்திகள் இல்லாவிட்டால் வாழ்க்கை சுவையாக இருக்காது என்றார் புடின்.
கடந்த வாரம் புடினின் பல நிகழ்ச்சிகள் காரணம் இல்லாமல் ரத்து செய்ய்பட்டன. அவரையும் காணவில்லை. இதனால்தான் வதந்திகள் பரவி விட்டன. அவர் எங்கே போயிருந்தார் என்பது இதுவரை ரஷ்ய அதிபர் மாளிகையால் விளக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.