கிரிமியாவை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார் ரஷியா அதிபர் புதின்
மாஸ்கோ: உக்ரைனில் இருந்து விடுதலை பெறுவதாக அறிவித்துள்ள கிரிமீயாவை சுதந்திர நாடாக ரஷியா அதிபர் புதின் பிரகடனம் செய்துள்ளார்.
உக்ரைனின் சுயாட்சி பகுதியாக இருந்து வந்தது கிரிமியா. உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கும் விவகாரத்தில் அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் அடைக்கலம் புகுந்தார்.
இதைத் தொடர்ந்து உக்ரைனின் கிரிமியா பகுதிக்குள் நுழைந்து அதை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ரஷியா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் கிரிமியா ரஷியாவுடன் இணைவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 97% பேர் ரஷியாவுடன் இணைய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து கிரிமியா நாடாளுமன்றம், தமது நாடு யுக்ரெய்னில் இருந்து சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்ததுடன் ரஷ்யாவில் இணைவதற்கும் விண்ணப்பித்தது. மேலும் கிரிமியா வளைகுடாவில் உக்ரைன் சட்டங்கள் இனி செல்லுபடியாகாது என்றும் பிரகடனம் செய்தது.
கிரிமியாவின் வேண்டுகோளை ஏற்றுள்ள ரஷியா அதிபர் புதின், அதை ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார். மேலும் கிரிமியாவை ரஷியாவுடன் முறைப்படி இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
ரஷியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளன.