டொனால்ட் டிரம்ப் திறமையான, சிறப்பு வாய்ந்த மனிதர்: ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் திறமையான, சிறப்பு வாய்ந்த மனிதர் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. ஆனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ‘இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என வெளியிட்ட விஷக்கருத்து, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களை மட்டும் அல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியடைவைத்தது.
இந்நிலையில் நேற்று மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனால்ட் டிரம்ப் திறமையான சிறப்பு வாய்ந்த மனிதர் என்று கூறியுள்ளார். மேலும் "டொனால்ட் டிரம்ப் நல்லொழுக்கம் பற்றி முடிவு செய்யவேண்டியது நாங்கள் இல்லை. அமெரிக்க வாக்காளர்கள்தான். ஆனால் அதிபர் வேட்பாளர்களுக்கான முழுமையான தகுதியுடைய தலைவர் டொனால்ட் டிரம்ப் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேசமயம் அமெரிக்காவின் அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளோம்" என புதின் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் தொடர்பான டொனால்ட் டிரம்ப் பேச்சு, பிரிவினையை தூண்டக்கூடிய முட்டாள் தனமான பேச்சு என்பதுடன் தவறானதும் கூட என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது