வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரளா மக்கள்.. உதவிக்கரம் நீட்டிய கத்தார் இளவரசர் ரூ.35 கோடி நிதி
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரளாவுக்கு கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல் தானி ரூ.35 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
கத்தார்: வரலாறு காணாத மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளா மக்களுக்கு உதவி செய்யும் வகையில் கத்தார் நாட்டு அரசு ரூ.35 கோடி கேரள அரசுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்துவருவதால் கேரளா மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கிறது. வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து அரசின் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமல்லாமல் முப்படையினரும் களம் இறங்கி மக்களை காப்பாற்றி வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.100 கோடி நிவாரண நிதியை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி ரூ.500 கோடி நிவாரண உதவியாக அறிவித்தார். மேலும், கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளன.
இந்நிலையில், கேரள மக்கள் பெரிய அளவில் வசிக்கும் அரபு நாடுகளிலிருந்தும் உதவிக் கரம் நீண்டு வருகின்றன.
அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம் நாடு கேரள மாநிலத்துக்கு உதவுவதற்காகவே தனியாக குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்த நிலையில், கத்தார் நாட்டு அரசு 50 லட்சம் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
கேரளாவின் வெள்ள பாதிப்புகளை அறிந்த ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு அரசின் துணை அதிபர் ஷேக் அல் மக்தும் தனது டிவிட்டர் பக்கத்தில், மலையாளம், ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கேரள மக்கள் எங்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தையும் பகிர விரும்பகிறோம். இதற்காக தனிக்குழு அமைத்து, ஒவ்வொரு உதவி செய்ய கேட்டு இருக்கிறோம் எனத் தெரிவித்தார். இதற்குப் பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், கத்தார் நாட்டு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக ரூ.35 கோடியை அளிப்பதாக அறிவித்துள்ளது.மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கத்தார் நாட்டு பிரதமர் அப்துல்லா பி நசீர் பின் கலீபா அல் தானி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இளவரசர் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிவாரணமாக அறிவித்துள்ளார். (அதாவது இந்திய ரூபாயில் ரூ.35கோடி) வெள்ளத்திலும், மழையிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கத்தார் அரசு சார்பில் ஆறுதல்களையும், இரங்கலையும் தெரிவிக்கிறோம். கத்தார் நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவியாக இருந்த மக்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.