மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: மூதாட்டி, குழந்தை பலி, 32 பேர் காயம்
கவுதமாலா சிட்டி: கவுதமாலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர், 32 பேர் காயம் அடைந்தனர்.
மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இந்நிலையில் கவுதமாலா மற்றும் மெக்சிகோ எல்லை அருகே திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பியூர்டோ மாடெரோ பகுதியின் வடகிழக்கில் 2 கிமீ தொலைவில் ஏற்பட்டது.
அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கவுதமாலாவில் உள்ள சான் மார்கோஸ் பகுதி தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு மூதாட்டியும், குழந்தையும் பலியாகியுள்ளனர். கட்டடம் குலுங்கி இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை இடிபாடுகளில் சிக்கி பலியானது. நில அதிர்வால் மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது தவிர 32 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் 41 வீடுகள் கடும் சேதமும், 17 வீடுகள் மிதமான சேதமும், 22 வீடுகள் லேசான சேதமும் அடைந்துள்ளன. மேலும் 44 பள்ளிக்கூடங்கள் சேதம் அடைந்துள்ளன.
சேதம் அடைந்த வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு சான் மார்கோஸில் 7.4 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது 48 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.