தைவான் பூகம்பம்: பலி 18 ஆக உயர்வு.. இடிபாட்டில் 24 மணி நேரம் சிக்கித் தவித்தவர் உயிருடன் மீட்பு
தைபே: தைவானில் ஏற்பட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் 132 பேர் சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
தைவானில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.4 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் தைவானின் தென் பகுதியில் உள்ள தைனான் நகரில் இருக்கும் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக 17 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. நிலநடுக்கத்தால் 8 பேர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட இடிபாடுகளில் 132 பேர் சிக்கியிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து 20 வயது ஹுவாங் குவாங் வீ என்ற வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார். அவரை மீட்பு படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்கள் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று உறவினர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 96 அபார்ட்மென்ட்கள் இருந்தன. அவற்றில் 256 பேர் வசித்தனர். 1990களில் கட்டப்பட்ட அந்த குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்துள்ள நிலையில் அதன் கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் உதவி தேவைப்பட்டால் செய்ய தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. முன்னதாக 1999ம் ஆண்டு மத்திய தைவானில் ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.