ராணியின் 90வது பிறந்த நாள்.. "ஹாட்"டாக விற்றுத் தீர்ந்த அனுமதிச் சீட்டுகள்
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி சீட்டுகள் விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 90வது பிறந்தநாள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தெதி கொண்டாடப்பட உள்ளது. இதனைக் கோலாகலமாகக் கொண்டாட பக்கிங்காம் அரண்மனை தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பக்கிஹ்காம் அரண்மனை அருகே மிகப் பெரிய மால் ஒன்றில் இந்த பிரமாண்ட கொண்டாட்டம் இடம் பெறுகிறது.
ராணியின் பிறந்தநாளன்று நடைபெற உள்ள விருந்து நிகழ்ச்சியில் ராணி, அவரது கணவர் பிலிப் மற்றும் பேரன்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
கலை நிகழ்ச்சி...
இதற்கிடையே, வரும் மே மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை வின்ஸ்டர் காசில் பகுதியில் ராணியின் பிறந்தநாளையொட்டி, கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 நாட்கள்...
மூன்று நாட்கள் நடைபெறும் இதில், சுமார் 900 குதிரைகள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து வரும் 1500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
டிக்கெட் விலை...
இந்த நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் விலை ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதன் முன்பதிவு நேற்று தொடங்கியது.
அரை மணி நேரத்திலேயே...
டிக்கெட் விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்திலேயே சுமார் 4 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
இலவசம்...
இது தவிர இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக 5 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளும் வினியோகம் செய்யப்பட உள்ளன. அவை வரும் டிசம்பர் மாதம் குலுக்கல் முறையில் தரப்படும் என ராணியின் அரண்மனை வட்டாரம் அறிவித்துள்ளது.
ராணியின் வாழ்க்கை...
இந்த நிகழ்ச்சியில் ராணியின் வாழ்க்கை, குதிரைகள் மீதான அவரது காதல், சமூக அக்கறை, நாட்டின் பாதுகாப்பில் ஈடுபாடு, மற்ற நாடுகளுடனான நல்லுறவு குறித்த தகவல்கள் இடம் பெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.