மாயமான மலேசிய விமான பயணிகள் யாருமே செல்போனில் தொடர்புகொள்ளாதது ஏன்?
செபாங்: மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் கூட ஏன் செல்போனில் யாரையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை என்பது மர்மமாக உள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் 4 விமானங்கள் கடத்தப்பட்டபோது அதில் பயணித்தவர்கள் அவசர, அவசரமாக செல்போன்கள் மூலம் தங்கள் உறவினர்கள், அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். ஆனால் மாயமான மலேசிய விமானம் வேறு பாதையில் சென்ற போதிலும் அதில் பயணம் செய்தவர்கள் அமைதியாக இருந்துள்ளனர்.
பயணிகளில் ஒருவர் கூட செல்போனில் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. மேலும் ஒரு ட்வீட், இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ என்று ஒரு தொடர்பும் இல்லை.
விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். அவர்களை அடுத்து மலேசியர்கள் அதிக அளவில் இருந்தனர். செல்போன் பயன்பாட்டுக்கு பெயர்போன இந்த நாட்டு மக்கள் செல்போனில் யாருடனும் அதுவும் ஆபத்து காலத்தில் கூட பேசாதது பலரை வியக்க வைத்துள்ளது.