ஆஸ்திரேலியாவில் தொடரும் இனவெறி தாக்குதல்... கேரள இளைஞர் படுகாயம்
ஆஸ்திரேலியாவில் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வந்த கேரள இளைஞரை இந்தியரா என்று கேட்டு அந்நாட்டு இளைஞர்கள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோபர்ட் : ஆஸ்திரேலியாவில் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வரும் கேரள இளைஞர் மீது அந்நாட்டு இளைஞர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் லீ மாக்ஸ். அவர் ஆஸ்திரேலியாவில் டாக்ஸி ஓட்டி வருகிறார். ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் என்ற இடத்தில் துரித உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இளைஞர்கள் சிலர் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கடையின் உரிமையாளுடன் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டனர். அந்த வழியாக டாக்ஸியில் வந்த லீ மாக்ஸை வழிமறித்த அந்த இளைஞர்கள் அவரை இந்தியரா என்று கேட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவரை அந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் இனவெறியால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளத்தைச் சேர்ந்த பாதிரியார் டாமி கலாத்தூர் மெல்போர்னில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது அங்கு கூடியிருந்தோர் முன்னிலையிலேயே கடுமையாக தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.