திருட்டுப் போன ‘கோபால்ட் 60’ கதிரியக்கப் பொருள் மீட்பு: கடத்தல்காரர்கள் கதி என்ன?
வியன்னா: வியன்னாவில் காணாமல் போனதாக சர்வதேச அணுசக்திமையம் அறிவித்த மருத்துவக் கதிரியக்கப் பொருட்கள் மீட்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் வடக்குப்பகுதியில் உள்ள டிஜூவானா நகரில் இயங்கிவரும் மருத்துவமனை ஒன்றிலிருந்து மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கப் பொருளான ‘டர்ட்டி பாம்' என அழைக்கப் படும் ‘கோபால்ட் -60' கடந்த 2ம் தேதி, ஒரு டிரக்கில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு கதிரியக்க கழிவு சேமிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த டிரக், மெக்சிகோ அருகே உள்ள டேபோஜாகோ என்ற இடத்தில் மர்ம நபர்களால் கடத்தப் பட்டது. இத்தகவலை நேற்று வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி மையம் உறுதி செய்தது.
ட்ரக்கானது திருடப்பட்ட வேளையில் அதன் உள்ளே இருந்த கதிரியக்கப் பொருள் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது என்ற போதும், கடத்தியவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டால் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் சூழல் உண்டாகலாம் என அம்மையம் அச்சம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காணாமல் போன டிரக் கிடைத்து விட்டதாகவும், கதிரியக்கப் பொருள் வைக்கப் பட்டிருந்த பெட்டி திறக்கப் பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் மார்டோனியோ ஜிமேனஸ் ரோஜாஸ் என்ற அதிகாரி.
மேலும், திருடர்கள் அந்தப் பெட்டியைத் திறந்ததினால் கதிரியக்கப் பாதிப்பிற்கு ஆளாகியிருக்ககூடும் என்றும் அவர்கள் இறப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் திருட்டுச் சம்பவங்கள் சர்வ சாதாரணம் என்பதால், வண்டியில் இருந்த பொருள் என்னவென்று தெரியாமலேயே திருடர்கள் கதிரியக்கப் பொருட்களைத் திருடிச் சென்றிருக்கக்கூடும் என ஹிடால்கோ மாகாண செய்தித் தொடர்பாளரான பெர்னாண்டோ ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.
ஆயினும், டிரக்கைக் கடத்திய மர்மநபர்கள் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.