அமெரிக்காவில் முதல்முறையாக இந்தியருக்கு மரண தண்டனை.. அடுத்த மாதம் நிறைவேற்றம்!
அமெரிக்காவில் இந்திய என்ஜினியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பென்சில்வேனியா: அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ரகுநந்தன் யண்டாமுரி என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் இவர் ஆவார்.
ஏராளமான இந்தியர்கள் வேலை மற்றும் பணி நிமித்தமாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டாமுரி.
சாஃப்ட்வேர் என்ஜினியர்
32 வயதான இவர் பென்சில்வேனியா மாகாணத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். ரகுநந்தன் ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ளார்.
மூதாட்டி, குழந்தை கொலை
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் அவருடைய 10 மாத பேத்தியை கடத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ரகுநந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.
பிப்.23ல் நிறைவேற்றம்
இதைத்தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ரகுநந்தனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பென்சில்வேனியா நீதிமன்றம் நாள் குறித்துள்ளது.
முதல் இந்தியர்
பிப்ரவரி 23ஆம் தேதி விஷஊசி மூலம் ரகுநந்தனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் ரகுநந்தன் ஆவர்
நிறுத்தி வைக்க வாய்ப்பு
2015 முதல், மரண தண்டனையை நிறைவேற்ற, பென்சில்வேனியா கவர்னர், தற்காலிகத் தடை விதித்திருந்தார். இதன் அடிப்படையில், ரகுநந்தனின் தண்டணை நிறுத்தி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நிராகரிப்பு
தனது மரண தண்டனையை எதிர்த்து ரகுநந்தன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தார். ஆனால் அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.