வேலை கிடைக்காதவர்களின் கோபம் மோடிக்கு எதிராக திரும்புகிறது - அமெரிக்காவில் ராகுல் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரின்ஸ்டன் : காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய சவாலாக இருந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று உறுதியளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி வேலைவாய்ப்பை அதிகரிக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 15 நாள் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று பேசி வருகிறார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய ராகுல் காந்தி மோடி அரசை சாடினார்.
பிரதான பிரச்சினை
நரேந்திர மோடி, ட்ரம்ப் போன்றவர்கள் வெற்றி பெற்றதற்கு வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மக்கள் சந்தித்த இன்னல்களே காரணம் என்ற நினைக்கிறேன். ஆனால் இந்தியாவின் பிரதான பிரச்னையான இது குறித்து பிரதமர் போதுமான நடவடிக்கை எடுத்ததாக எனக்குத் தெரியவில்லை.
வேலையில்லா திண்டாட்டம்
ட்ரம்ப் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பிரதமர் மோடி போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் வேலைவாய்ப்பு சந்தையில் 30 ஆயிரம் இளைஞர்கள் இணைகின்றனர். ஆனால் நாள் ஒன்றிற்கு 500 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் கோபம்
வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை என்று காங்கிரஸ் அரசின் மீதான வெறுப்பால் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் பாஜக அரசும் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க எதுவும் செய்யவில்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பற்றோர் பிரதமர் மோடி மீது ஆத்திரம் அடைந்து வருகின்றனர்.
தீர்வு தேவை
ஆனால் அவர்களை பிரச்சனையில் இருந்து திசைதிருப்பும் பணியில் மோடி ஈடுபட்டு வருகிறார். எனவே வேலைவாய்ப்பின்மை தான் பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளதை அனைவரும் அறிவார்கள். விரைவில் இதற்கு அனைவரும் சேர்ந்து தீர்வு காண வேண்டும்.
ஒப்புக் கொள்ள வேண்டும்
முதலில் பிரச்னை இருக்கிறது என்பதை நாம் ஒப்பு கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒன்றுபட்டு அந்த பிரச்னைக்கான தீர்வை கோண வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குறையை கூட யாரும் ஒப்பு கொள்வது கிடையாது. புதிய தொழில்நுட்பங்களும், நவீன மயமாக்கலும் வேலைவாய்ப்பை பறிக்கின்றன.
யாருக்கு போகிறது வேலைவாய்ப்பு
ப்ளூகாலர் என்று சொல்லப்படும் பணிகள் மாற்றம் காண இருக்கின்றன. ஆனால் இந்த நேரத்தில் எழும் கேள்வி இந்தப் பணியை யார் செய்யப் போகிறார்கள் என்பதே, அதே போன்ற எந்த நாடு இந்த வேலைவாய்ப்புகளை வழங்கப் போகிறது என்பதும் தான் இப்போதைய வினா.
எல்லோரையும் சென்றடையவில்லை
இந்தியாவில் 21ம் நூற்றாண்டிலும் ஆளும் பாஜகவின் தொலைநோக்கு திட்டம் அமலுக்கு வராத பல பகுதிகள் உள்ளன. சில சமுதாய மக்கள், சிறுபான்மை மக்கள், மலைவாழ் மக்கள் என யாருமே பாஜக வகுத்துள்ள திட்டங்களுக்குள் வரவில்லை என்றும் ராகுல் காந்தி பேசினார்.