காங். தலைவராக முதல் வெளிநாட்டு பயணம்- பஹ்ரைன் இளவரசருடன் ராகுல் காந்தி சந்திப்பு!
பஹ்ரைன் இளவரசரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின்னர் ராகுல் காந்தி தற்போது முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்
மனாமா: காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின்னர் ராகுல் காந்தி தற்போது முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாஸ் அல் கலிபாவை ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.
காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியை ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பஹ்ரைன் சென்றுள்ளார் ராகுல் காந்தி.
பஹ்ரைன் அரசு விருந்தினராக இப்பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இன்று தலைநகர் மனாமாவில் பட்டத்து இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாஸ் அல் கலிபாவை இன்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பட்டத்து இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாஸ் அல் கலிபாவுடனான சந்திப்பு நன்றாக இருந்தது. இச்சந்திப்பில் இந்தியா, பஹ்ரைன் நலன்கள் குறித்து விவாதித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியினருக்கான சர்வதேச அமைப்பின் விழாவிலும் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மனாமாவில் இந்திய தொழிலதிபர்களுடன் நாளை ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். மேலும் பஹ்ரைன் மன்னர் ஹமாஸ் பின் ஈசா அல் கலிபாவையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.