நிதி முறைகேடு வழக்கு: ராஜபக்சே மகனுக்கு ஜாமீன் வழங்க இலங்கை நீதிமன்றம் மறுப்பு !
கொழும்பு: தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ராஜபக்சே மகன் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க இலங்கை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித்த ராஜபக்சே உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களை வரும் 27 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக கடந்த 30 ஆம் தேதி இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோசித்த ராஜபக்சே உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை 12 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் யோசித்த ராஜபக்சே உள்ளிட்ட 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைகள் முடிவடைந்து விட்டதால், சந்தேக நபர்களை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் வாதாடினார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தொடந்து விசாரணைகள் நடைபெற்று வருவதால் இவர்களை விடுதலை செய்வதன் மூலம் அதற்கு பாதிப்பு ஏற்படும் என கூறினார். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார். மேலும் வரும் 27 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.