ஆப்கானிஸ்தானிலும் ரஜினிக்கு ரசிகர்கள்... இதோ ஒரு உதாரண ரசிகர்!
சியாட்டல்(யு.எஸ்). லிங்கா விவகாரம் உலகெங்கும் பரபரப்பாகி ஓய்ந்து விட்ட நிலையில், அதைப் பற்றி எந்த விவரமும் அறியாத ஆப்கானிஸ்தான் ரஜினி ரசிகர் ஒருவர், லிங்கா டிவிடி க்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
சியாட்டலில் வசித்து வரும் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த முகம்மது ஹுசேன் என்னும் அந்த ரஜினி ரசிகர், லிங்கா டிவிடி எங்கு கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருக்கிறார்.
சால்பாஸ் பார்த்தும் ரஜினியைப் பிடிச்சிப் போச்சு!
ஆப்கானிஸ்தானில் பெரும்பாலும் இந்திப் படங்கள் டிவிடிக்களே அதிகம் கிடைக்கும். சிறுவயதில் ரஜினி ,சன்னி தியோல், ஸ்ரீதேவி நடித்த சால்பாஸ் திரைப்படம் பார்த்தது முதல் தீவிர ரஜினி ரசிகர் ஆகிவிட்ட ஹுசைன், ரஜினி படத்தைக் காட்டி டிவிடிகளை தேடிப்பிடித்து வாங்குகிறார்.
அப்போதுதான் அவருக்கு ரஜினி நடித்த தமிழ்ப் படங்கள் கிடைத்துள்ளன. அன்று முதல் இன்று வரை அனைத்து ரஜினி படங்களையும் விடாமல் பார்த்து வருகிறார். எந்திரனின் இந்திப் பதிப்பான ரோபோவை கடைசியாக பார்த்துள்ளார். தன்னைப் போல் இன்னும் ஏராளமான ரஜினி ரசிகர்கள் ஆப்கானிஸ்தானில் உண்டு என்று கூறுகிறார் ஹுசேன்.
ரஜினி சாரைப் பார்க்க முடியுமா?
ஆப்கானிஸ்தானில் பிறந்து வளர்ந்து, அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரது மனைவியின் அழைப்பில் தற்போது சியாட்டல் வந்துள்ள ஹூசைனுக்கு, ரஜினி படங்களின் தேடுதல்கள் அதிகரித்துள்ளது. அவரது மனைவிக்கும் ரஜினியை ரொம்பவும் பிடிக்குமாம்.
லிங்கா படம் வெளிவந்ததை தெரிந்துள்ள அவர், அந்த படத்தின் டிவிடி எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் தவித்து வருகிறார்.
ஆசையுடன் மீசை வளர்த்தேன்!
ரஜினிப் படங்களைப் பார்த்து தானும் மீசை வளர்த்துக் கொண்டதாகவும் அதனால் தன்னை 'மீசைக்காரன்' என்று எல்லோரும் ஊரில் அழைப்பதாகவும் கூறும் ஹூசேனுக்கு ரஜினியைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களும் அத்துப்படி.
"ரஜினி ஒரு சிறந்த மனிதநேயர். வாழ்நாளில் ஒரு நாளாவது ரஜினியை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். அது சாத்தியம் தானா," என்கிறார் ஏக்கத்துடன்.
பொய்யைக் கொண்டாடும் இந்திப் படங்கள்
இந்தியில் ஒரளவு பேசத்தெரிந்த போதிலும் தமிழில் அவரால் பேச முடியவில்லை.
"இந்திப் படங்களை விட தமிழ்ப் படங்களில் கதை நன்றாக இருக்கிறது. குடும்பத்துடன் ஒன்றிப் பார்க்க முடிகிறது. இந்திப் படங்கள் எதார்த்தத்தை விட்டு மிகவும் விலகி இருப்பதாகவும் முற்றிலும் பொய்யானவை," என்கிறார் ஹூசைனி.
ஹுசேனுக்கு, ரவி தேஜா, நாகார்ஜூனா, விக்ரம் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய நடிகர்களையும் பிடிக்குமாம். ஐ படத்தில் விக்ரம் தன்னை வருத்தி நடித்துள்ளதையும் பாராட்டுகிறார்
இனிமேல் தியேட்டர்தான்..
சியாட்டலில் தமிழ்ப் படங்கள் வெளியாகும் என்ற தகவலைக் கேட்டு மகிழ்ச்சி பொங்க, இனிமேல் தியேட்டரிலேயே தமிழ்ப் படங்களைப் பார்க்கப் போவதாகக் கூறிய ஹூஸைன், ரஜினியின் அடுத்த படத்தை முதன் நாள் முதல் காட்சி தியேட்டரிலேயே பார்க்க ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழர் என்று தெரிந்த உடனே, என்னமோ ரஜினியையே நேரில் பார்த்த மாதிரி மரியாதை கொடுக்கிறார் ஹூஸைன். இது தமிழர்களுக்கு ரஜினி தேடித்தந்த புது அடையாளம்தான்!
-சியாட்டலிலிருந்து இர தினகர்