இளம் அரசியல்வாதிகள் 'ரஜினி, கமல்'... மலேசியா மேடையில் என்ன சொல்லப்போகிறார்கள்?
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நாளை மலேசியாவில் நடத்தப்படும் நட்சத்திர கலைநிகழ்ச்சியில் அரசியல்வாதியான பின்பு ரஜினியும், கமலும் ஒரே மேடையில் சந்திக்கப் போவதால் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்க
கோலாலம்பூர் : தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நாளை மலேசியாவில் நடத்தப்படும் நட்சத்திர கலைநிகழ்ச்சியில் அரசியல்வாதியான பின்பு ரஜினியும், கமலும் ஒரே மேடையில் சந்திக்கப் போவதால் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடன் சென்றுள்ளார்.
இதே போன்று திரைத்துறையை சேர்ந்த சுமார் 400 பேர் ஒரே பிளைட்டில் மலேசியா புறப்பட்டு சென்றுள்ளனர். நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகள், ஆடல், பாடல், கிரிக்கெட் போட்டி என்று ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மலேசியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் மேடையில் ஒரே காரில் வந்து இறங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி அரசியல்
டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய கட்சிக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். ரஜினியின் அரசியல் வருகையின் போது அமெரிக்காவில் இருந்த போது நடிகர் கமல் முதல் ஆளாக ரஜினிக்கு டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
நவம்பரில் அறிவித்த கமல்
ரஜினிக்கு முன்பே அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கமல் நவம்பரில் அறிவித்து, கட்சிக்கான நிதி வசூலுக்காக ஆப் ஒன்றையும் அறிமுகம் செய்தார். தொடர்ந்து மக்கள் பிரச்னைகள் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தவர் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற பின்னர் அரசியல் பக்கமும், டுவிட்டர் பக்கமும் அமைதியாகவே இருந்தார்.
இளம் அரசியல்வாதிகளின் சந்திப்பு
இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நடிகர் கமல் மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை நடிகர்களாக மேடைகளில் தோன்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதன்முறையாக அரசியல்வாதிகளாகவும் இந்த மேடையில் சந்திக்க உள்ளனர்.
என்ன பேசப்போகிறார்கள்?
ரஜினியின் வெளிப்படையான அரசியல் அறிவிப்புக்குப் பின் இரண்டு பேரும் ஒரே மேடையில் தோன்றுவதால் அவர்களின் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில், அவர்கள் மேடையில் என்ன பேசப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இருவரின் அரசியல் பாதையும் வெவ்வேறு என்பதை இந்த மேடைப் பேச்சில் தெளிவு படுத்துவார்களா, அல்லது இருவரும் கரம் கோர்த்து செயல்படுவார்கள் என்ற பேச்சுகளுக்கு மலேசியா நிகழ்ச்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.