நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது... ரஜினி உருக்கம்
நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார்.
கோலாலம்பூர்: நடிகனாக மட்டுமே எனது வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எனது ஆசை என்றும் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே நான் அரசியலுக்கு வருவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நேற்று கோலாலம்பூர் புக்கிட் ஜலால் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 12 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.
தம்மை வாழ வைத்த தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நடிகனாக வந்து மக்களை மகிழ்வித்து நடிகனாகவே சென்று விட கூடாது என விரும்புகிறேன்.
என் 45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த வரை, படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லி இருக்கிறேன் என்றார் நடிகர் ரஜினிகாந்த். அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ரஜினி கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.