எல்லையில் அத்துமீறுவது சீனாதான்.. எல்லைத் தாண்டக் கூடாது.. சீன அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் காட்டம்
மாஸ்கோ: எல்லையில் அத்துமீறுவது சீனாதான் என்றும் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது என்றும் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வீ ஃபெங்குடனான பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக தெரிவித்தார்.
Recommended Video
மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியா- சீனா எல்லை பிரச்சினை குறித்து நடந்த பேச்சுவார்த்தையின் போது ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார். உயர் மட்ட அளவிலா நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய மண்ணில் சீனா தொடர்ந்து 3 முறை ஊடுருவியது. இதை இந்திய வீரர்கள் திறம்பட முறியடித்தார்கள். இந்த நிலையில் மாஸ்கோவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாநாட்டில் இந்தியா, சீனா உள்பட 8 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இதுதான் நாம்... வடக்கு சிக்கிமில் வழிதவறி விழிபிதுங்கிய சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்!
எல்லை பிரச்சினை
இதில் இந்தியா -சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு பிரதிநிதிகளும் பேசுவர் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் நேற்றைய தினம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ,சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வீ ஃபெங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் என்ன பேசினார்கள் என்பது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
கால்வன் பள்ளத்தாக்கு
அப்போது ராஜ்நாத் சிங், எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் சம்பவங்களில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவித்தார். அவர் கூறுகையில் எல்லை நிர்வாகத்தில் இந்திய வீரர்கள் எப்போது பொறுப்பான அணுகுமுறையையே எடுக்கிறார்கள்.
பிராந்திய ஒருமைப்பாடு
ஆனால் அதே சமயத்தில் இந்திய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்க வீரர்களின் உறுதித்தன்மை குறித்து சந்தேகப்பட வேண்டாம். இரு நாட்டு தலைவர்களுக்கும் ஏற்கெனவே ஏற்பட்ட கருத்தொற்றுமைக்கேற்ப இரு தரப்பினரும் செயல்பட வேண்டும். இரு தரப்பு உறவுகளும் வலுப்பட எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
தீர்வு
கருத்து வேறுபாடுகளை இரு தரப்பும் அனுமதிக்க கூடாது. அவ்வாறு செய்தால் அது மோதலை ஏற்படுத்தும். இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கேற்ப இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளில் பாங்காங் ஏரி பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலிருந்து சீன படைகள் வாபஸ் பெற வேண்டும். அனைத்தையும் ராணுவ அல்லது ராஜ்ஜீய ரீதியிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்.
வாபஸ்
ஒப்பந்தத்தை மீறி எல்லையில் படைகளை குவிக்கக் கூடாது. படை குவிப்பு போன்ற ஒருதலைபட்சமான நடவடிக்கை இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறுகிறது. எனவே படைகள் வாபஸ் பெறப்பட்டு எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என ராஜ்நாத் சிங் காட்டமாக தெரிவித்ததாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக எல்லையில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு இந்தியாதான் பொறுப்பு என சீன தரப்பு தெரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.