ஈரானில் ராஜ்நாத்சிங்- பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியுடன் சந்திப்பு
டெஹ்ரான்: ரஷ்யா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஈரான் சென்றார். ஈரானில் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியை இன்று ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதனையொட்டி 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ சென்றார் ராஜ்நாத்சிங்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத்சிங், சீனா பாதுகாப்பு அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா தமது இறையாண்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது; சீனா எல்லைகளில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை கைவிட வேண்டும் என்று காட்டமாக வலியுறுத்தினார் ராஜ்நாத்சிங்.
மாஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நேற்று மாலை சென்றார் ராஜ்நாத்சிங். அங்கு இன்று அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.
ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு- மாஸ்கோவில் பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங்
இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜ்நாத்சிங், இருநாடுகளிடையே நல்லுறவு குறித்து விவாதித்தோம். இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள், ஆப்கான் பிரச்சனை ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் கூறினார்.