ஆந்தையாக இருந்தாலும் ஆபத்துன்னா நீச்சலடிச்சே ஆகனும் சார்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள போவெல் ஏரியில் தவறி விழுந்த சின்னஞ்சிறிய ஆந்தை ஒன்று நீச்சல் அடித்த காட்சி வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக பறவைகள் குறைந்த அளவில் உள்ள நீரிலேயே நீந்தும். அதுவும் மீன் உள்ளிட்ட இரை தேட மட்டுமே தண்ணீரில் இறங்கும். அதையும் ஒரு சில பறவைகளே செய்யும்.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டெரிக் ஜூக் மற்றும் அவரது நண்பர்கள் போவெல் ஏரிக்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு வினோதமான காட்சியை படம் பிடித்தனர்.
எப்போது?
அந்த வினோதமான காட்சி கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது. இருந்தாலும் அவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் கடந்த சில நாள்களாக அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
நீரில் விழுந்த ஆந்தை
போவெல் ஏரியில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி ஜூக்கும் அவரது நண்பர்களும் இருந்தனர். அப்போது அந்த ஏரியின் குறுகலான பகுதியில் ஆந்தை ஒன்று தவறி விழுந்தது. மிகவும் சின்னஞ்சிறிய அந்த ஆந்தை தனது சமயோஜித புத்தியை பயன்படுத்தியது.
நீந்திய ஆந்தை
அதைத் தொடர்ந்து அந்த ஆந்தை கொஞ்சமும் அசராமல் அதன் இறகுகளை கொண்டு நீரில் நீந்தி கரை சேர்ந்தது. பின்னர் இறகுகளை காயவைத்த பின்னர் பறந்து சென்று தாய் ஆந்தையிடம் தஞ்சம் அடைந்தது.
பறவைகள் நீந்துமா?
இந்த சம்பவம் வைரலாகி வருவதாலும், இது மிகவும் விசித்திரமான சம்பவம் என்பதாலும் இது சாத்தியமா என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், மிகவும் அசாதாரணமான சூழலில் வேறு வழியே இல்லையென்னும் போது பறவைகள் தங்களை காத்து கொள்ள நீச்சலடிக்கும் என்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு மிக்சிகன் ஏரியில் ஆந்தை நீச்சல் அடித்த வீடியோ வைரலாகியது.