பிரமாண்டமான முழு நிலா... பிரகாசமான நிலா... கிறிஸ்துமஸ் அன்னைக்கு வானத்தைப் பார்க்க மறந்துடாதீங்க!
நியூயார்க்: கிறிஸ்துமஸ் தினத்தன்று வானத்தில் பிரமாண்டமான பிரகாசம் நிறைந்த முழு நிலவு தோன்ற இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
வரும் வெள்ளியன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்றைய தினம் நிலாவும் மக்களின் கண்களுக்கு பரிசு தர உள்ளதாம். ஆம் அன்றைய தினம் பிரமாண்டமாக, அதிக பிரகாசத்துடன் முழு நிலவு வானத்தில் தோன்ற உள்ளதாம்.
38 ஆண்டுகளுக்குப் பின்...
இத்தகைய முழு நிலவு தரிசனம் 38 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த 1977ம் ஆண்டு இதே போன்ற முழு நிலா தோன்றியதாம்.
அடுத்த முழு நிலவு...
இதனைத் தொடர்ந்து அடுத்து இதே போன்ற முழு நிலவு 2034ம் ஆண்டு தோன்றுமாம். அன்றைய தினமும் கிறிஸ்துமஸ் தான் என்பது மற்றொரு சிறப்பு.
புல் கோல்ட் மூன்...
குளிர்காலத்தின் தொடக்கத்தில் இத்தகைய முழு நிலவு தோன்றுவதால், இது புல் கோல்ட் மூன் எனக் குறிப்பிடப்படுகிறது.
மறக்கமுடியாத நிகழ்வு...
அன்றைய தினம் வானத்தில் நிலவைப் பார்ப்பது நிச்சயம் எப்போதும் நினைவில் நிற்கும் நிகழ்வாக இருக்கும் என நாசா விஞ்ஞானி ஜான் கெல்லர் தெரிவித்துள்ளார்.
இதனால், சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வரும் வெள்ளிக்கிழமை வானத்தை பார்க்க மறந்துடாதீங்க!