ஐஸ்லாந்தின் முதல் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீசார் சுட்டதில் ஒருவர் பலி
ரெய்க்ஜவிக்: உலகிலேயே குற்ற விகிதம் குறைவாக நடைபெறும் நாடு என்ற பெருமையைப் பெற்ற நாடான ஐஸ்லாந்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகெங்கும் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவி வரும் நிலையில், மொத்தம் 3,22,000 என்ற அளவிலேயே மக்கள்தொகையைக் கொண்ட ஐஸ்லாந்து நாடு உலகிலேயே குற்ற விகிதங்களை மிகவும் குறைவாகக் கொண்ட நாடு என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று முதன்முதலாக அங்கு ஒரு துப்பாக்கிச் சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானதாக வெளியான தகவலை அந்நாட்டு காவல்துறை உறுதி செய்துள்ளது.
கிழக்கு ரெய்க்ஜவிக்கில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வசித்துவந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் அதிரடியாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்நபர் பலியானதாகத் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து தங்களின் வருத்தத்தை வெளியிட்ட காவல்துறை இறந்தவனது குடும்பத்திற்கும் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.