கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி
ரஷியாவின் கிழக்கில், அரிய சைபீரிய புலிகள் சேட்டை செய்யும் புகைப்படங்களை சிறுத்தைகளுக்கான தேசிய பூங்கா வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்தனமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் புலிகள் ஒரு தருணத்தில், கேமராவிற்கு முன் வந்து போஸ் கொடுக்கின்றன.
260,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அந்த பூங்காவில் 22 வளர்ந்த சைபீரியன் புலிகளும் ஏழு புலிக் குட்டிகளும் உள்ளன.
ஒரு சமயத்தில் தோலுக்காக புலிகளை வேட்டையாடுபவர்கள் இந்த புலி இனங்கள் அழியும் அளவிற்கு வேட்டையாடினார்கள். ஆனால் தற்போது இந்த இனம் அழிவிலிருந்து மீண்டு வருகிறது.
இந்த புகைப்படங்கள் தரையில் புதைத்து வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்றும். இம்மாதிரி விலங்குகளின் வாழ்க்கை மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்றும் அந்த சிறுத்தைகள் பூங்கா ரஷிய மொழியில் தெரிவித்துள்ளது.
இந்த கேமராக்கள் வனத்துறையாளர்களால் புலிகளையும் அதே அளவு சிறுத்தைகளையும் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டது என 'சைபீரியன் டைம்ஸ்' பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில், காட்டில் தரையில் புலிக்குட்டிகள் உருள்வது போலவும் பின் தாய் புலியால் கட்டுப்படுத்தப்படுவது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த தாய் புலி, சைபீரிய புலிகளின் எண்ணிக்கையை கண்காணித்த விஞ்ஞானிகளால் 'T7F' என்று ஏற்கனவே அறியப்பட்ட புலியாகும்.
2014ஆம் ஆண்டு அந்த தாய் புலி மூன்று புலிக்குட்டிகளுடன் படம் பிடிக்கப்பட்டது அதில் இரண்டு குட்டிகள் வளர்ந்துவிட்டதாக நம்பப்பட்டு சைபீரியாவிலிருந்து, அண்டை நாடான சீனாவிற்கு அனுப்பப்பட்ட்து.
மற்றொரு படத்தில் புலிக்குட்டி ஒன்று கேமராவை நெருங்கி வந்து அதை தடுக்கிறது அதனால் அதில் உள்ள மெமரி கார்ட் கீழே விழுந்து படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது.
ரஷியாவில் கிழக்கில் தொலைதூரத்தில் உள்ள க்ரை மாகணத்தின் தென் மேற்கு பகுதியில் இந்த சிறுத்தைகள் தேசிய பூங்கா அமைந்துள்ளது.
சைபீரிய புலிகள் பற்றிய சில குறிப்புகள்:
இந்த சைபீரிய புலிகள் ஆமர் புலிகள் என்றும் அழைக்கப்படும்
சைபீரிய புலிகளின் இயற்கை வாழ்விடம் ரஷியாவாக உள்ள போதும் அங்குள்ள பலவீனமான பொருளாதாரத்தின் காரணத்தால் இந்த புலிகள் அழிவை சந்தித்து வருகின்றன.
ரஷியாவில் வேட்டையாடுவது கடுமையாக தடுக்கப்பட்டாலும் பெரியளவில் ஆயுதங்கள் இல்லாமலும், குறைவான சம்பளம் பெறும் வனத்துறையாளர்களாலும் விலங்குகளை அதன் தோலுக்காக வேட்டையாடுபவர்களை தடுக்க முடியவில்லை.
1930ஆம் ஆண்டில் சைபீரிய புலிகள் இனம் அழிவில் இருந்த போது அதன் எண்ணிக்கை 20-30ஆக மட்டுமே இருந்தது.
ஆனால் தற்போது சைபீரிய காடுகளில் சுமார் 600 புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆதாரம்: wwf
தொடர்புடைய செய்திகள்:
ஆளில்லா விமானத்தை வீழ்த்திய புலிகள் - காணொளி
உலகளவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு