நானோவை மலிவு விலைக் கார் என்று சொன்னது தப்புத்தான்.. டாடா ஒப்புதல்
அப்படி சொல்லி காரை விற்கப் பார்த்ததும் தவறு என்றும் ரத்தன் கூறியுள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
டாடா கூறுகையில், மக்கள் முன்பு இந்தக் காரை உலகிலேயே விலை குறைவான கார் என்று கூறியது தவறுதான். அதைச் சொல்லி மார்க்கெட்டிங்கில் இறங்கியதும் தவறு. அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன். அது துரதிர்ஷ்டவசமாக நடந்து வி்ட்டது.
புதிய வகை நானோவை நாங்கள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அது இந்தியாவில் இருக்காது. வேறு ஒரு நாட்டில் அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். அது இந்தோனேசியாவாக இருக்கலாம். அல்லது ஐரோப்பிய நாடாக இருக்கலாம். வெளிநாடுகளில் நானோ குறித்து பலரும் ஆர்வமாக உள்ளனர்.
நானோவில் மாற்றங்கள் செய்து அதை மறு அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. புதிய கோணத்தில் நானோ மறு அறிமுகம் செய்யப்படும் என்றார் ரத்தன்.
நானோ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு லட்சம் கார் என்று கூறப்பட்டாலும் கூட அதன் விலை கூடுதலாகவே இருந்ததால் மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்தனர். மேலும் மக்களின் எதி்ர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும் நானோ இல்லை.
இதனால் விற்பனையும் படு வேகமாக சரிந்தது. கடந்த ஏப்ரல் - அக்டோபர் கால கட்டத்தில் வெறும் 12,322 கார்களே விற்றுள்ளன. கடந்த மாதம் புதிய சிஎன்ஜி - பெட்ரோல் என்ஜினுடன் கூடிய காரை அறிமுகப்படுத்தியது நானோ. ஆனால் அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நானோ அறிமுகமானது. அப்போது அதன் அடிபபடை மாடல் விலை ரூ. 1 லட்சமாக இருந்தது. இப்போது குறைந்த விலையே ரூ. 1.45 லட்சமாகும். அதிகபட்சம் ரூ. 2.65 லட்சமாகும்.