இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. 'வாழும் ஹிட்லர்' ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!
Recommended Video
ஆம்ஸ்டர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போஸ்னிய செர்பிய ராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஐநா குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
போஸ்னிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் அதிரடியாக கூறியுள்ளது.
1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை போஸ்னிய செர்பிய ராணுவ தளபதியாக இருந்தவர் ராட்கோ மிலாடிச். தற்போது அவருக்கு 74 வயதாகிறது.
இனப்படுகொலை
1992-95 காலப்பகுதியில் நடந்த பொஸ்னிய போரின்போது, இனப்படுகொலையில் ஈடுபட்டதாகவும் போர்க்காலக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஜெனரல் மிலாடிச் 11 குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார்.
சிறுவர்களையும் விடவில்லை
1995ம் ஆண்டில் ஸ்ரப்ரேனிசாவில் சிறுவர்கள் உட்பட 7000க்கும் அதிகமான முஸ்லிம் ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நடத்தியதாக மிலாடிச் மீது குற்றம் சாட்டப்பட்டது. சரயேவோ நகரை 44 மாதங்களாக முற்றுகையில் வைத்திருந்ததன் மூலம் 10,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
இதையடுத்து, 2011ல் ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டிருந்தார். 'த ஹேக்கில்' அமைக்கப்பட்ட 'முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்' வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி அல்போன்ஸ் ஒரியே நேற்று தீர்ப்பு வழங்கினார். ராடிக் மிலாடிச் மீதான குற்றங்களில் பெரும்பாலானவை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
குற்றங்கள் நிரூபணம்
7 ஆயிரம் போஸ்னிய முஸ்லிம் ஆண்களும், சிறுவர்களும், சிரெப்ரெனிகாவில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு மிலாடிச் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சராஜிவோ முற்றுகையின்போது, வேண்டுமென்றே பொது மக்கள் மீது ஷெல் மற்றும் ஸ்னைப்பிங் வகை தாக்குதலை மிலாடிச் நடத்திய குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு குற்றச்சாட்டிலிருந்து மட்டும் இவர் விடுவிக்கப்பட்டார்.
20 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு
530 நாட்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட, இந்த தீர்ப்பை எதிர்நோக்கி, பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் நெதர்லாந்துக்கு பெருமளவில் வந்திருந்தனர். தீர்ப்பை நீதிபதி வாசித்தபோது பழைய சம்பவங்களை அவர் நினைவுபடுத்தியபோது, பலரும் கண்ணீர் விட்டு கதறினர். தீர்ப்புக்கு பிறகு சிலர் இதில் திருப்தி எனவும், சிலர் திருப்தியில்லை என்றும் தண்டனையை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
மேல்முறையீடுக்கு திட்டம்
இதனிடையே இந்த குற்றங்களை மிலாடிச் மறுத்துள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அவருடைய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரம், ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத் அச் ஹூசைன் இதனை நியாயத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றிருக்கிறார்.