"உங்க அம்மாவ.." தீர்ப்பு சொன்ன ஐ.நா. நீதிபதியை தகாத வார்த்தையில் திட்டிய "மிருகன்" மிலாடிச்!
Recommended Video
ஆம்ஸ்டர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போஸ்னிய செர்பிய ராணுவ தளபதி ராட்கோ மிலாடிசுக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில், நீதிபதியை பார்த்து கெட்ட வார்த்தையில் அவர் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை போஸ்னிய செர்பிய ராணுவ தளபதியாக இருந்தவர் ராட்கோ மிலாடிச். 74 வயதாகும் அவர் மீது 1992-95 காலப்பகுதியில் நடந்த பொஸ்னிய போரின்போது, இனப்படுகொலையில் ஈடுபட்டதாக மொத்தம் 11 குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார்.
2011ல் ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்ட நிலையில் 'த ஹேக்கில்' அமைக்கப்பட்ட 'முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்' வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்
நீதிபதி அல்போன்ஸ் ஒரியே நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது ராடிக் மிலாடிச் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். நீதிமன்றத்திற்குள் வந்ததும், இரு கைகளின் கட்டை விரல்களை காண்பித்து, புன்னகைத்தார் மிலாடிச். நீதிமன்றத்தில் கூடியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் இதை பார்த்து பெரும் கோபம் கொண்டது அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.
கோபமாக மாறிய சிரிப்பு
சிரித்தபடியே தீர்ப்பை எதிர்கொண்டார் மிலாடிச். ஆனால், நீதிபதி அல்போன்ஸ் ஒரியே தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும், கோபமடைந்தார் மிலாடிச்.
தீர்ப்பின் நடுவே "பொய்.. பொய்.." என கத்தினார். அவரை அமைதிகாக்க நீதிபதி வலியுறுத்தினார்.
கெட்ட வார்த்தை
ஆனால் நீதிபதியை பார்த்து, "I'll f**k your mother" என்று கத்தினார் மிலாடிச். இதையடுத்து அவரை கோர்ட்டிலிருந்து அப்புறப்படுத்தி வெளியே அமர வைக்கும்படி காவலர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அங்குள்ள திரையில் தீர்ப்பு வாசிப்பது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதை பார்க்க மிலாடிச்சிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அட்டகாசம் தாங்கவில்லை
முன்னதாக தீர்ப்பு வாசிக்கப்பட தொடங்கியபோது, சுமார் அரை மணி நேரம், பிரேக் எடுத்தார் மிலாடிச். கழிவறை செல்ல வேண்டும் என கூறி அவர் சென்றுவிட்டதால் தீர்ப்பு தாமதமானது. மேலும், தீர்ப்பை சுறுக்கமாக வாசிக்கும்படி மிலாடிச் வழக்கறிஞர் நீதிபதியை கேட்டுக்கொண்டார். தனது கட்சிக்காரருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் வெகுநேரம் கோர்ட்டில் நிற்க முடியாது என்று அவர் கோரிக்கைவிடுத்தார். ஆனால் இதை நீதிபதி மறுத்திருந்தார்.
மனித குலத்திற்கு எதிரானவர்
7 ஆயிரம் போஸ்னிய முஸ்லிம் ஆண்களும், சிறுவர்களும், சிரெப்ரெனிகாவில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு மிலாடிச் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சராஜிவோ முற்றுகையின்போது, வேண்டுமென்றே பொது மக்கள் மீது ஷெல் மற்றும் ஸ்னைப்பிங் வகை தாக்குதலை மிலாடிச் நடத்திய குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு குற்றச்சாட்டிலிருந்து மட்டும் இவர் விடுவிக்கப்பட்டார்.