ஏமனில் நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது?: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
சனா: ஏமனில் போராடி வரும் ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர்.
ஏமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் சன்னி பிரிவு அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் ஆதரவாளர்களும் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து போராடுகின்றனர். உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதிபர் அபெத்ரபோ மன்சூர் ஹதி தனக்கு ஆதரவு அளிக்கும் அண்டை நாடான சவுதி அரேபியாவுக்கு தப்பியோடிவிட்டார்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையை நேற்று கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்த மாளிகை சாலேவின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரில் இருக்கும் ரஷ்ய தூதரகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்கள், உபகரணங்கள், ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றனர். முன்னதாக சவுதி தலைமையிலான அரபு நாடுகள் ஏடனில் வான்வெளித் தாக்குதல் நடத்தியபோது ரஷ்ய தூதரகமும் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக புதன்கிழமை இரவு ஏமனையொட்டியுள்ள தென்மேற்கு சவுதியில் உள்ள அசிர் பகுதியின் எல்லையில் சவுதி ராணுவத்தினருக்கும், ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் சவுதி ராணுவத்தைச் சேர்ந்த வீரர் சல்மான் அலி யஹ்யா அல் மாலிகி என்பவர் பலியானார். மேலும் 10 வீரர்கள் காயம் அடைந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் சவுதியைச் சேர்ந்த முதல் நபர் பலியாகியுள்ளார்.
இந்த பதட்டமான சூழலில் ஏமனில் சிக்கித் தவிக்கும் சீனர்களை மீட்க அந்நாட்டு ராணுவ கப்பல் ஏடன் துறைமுகத்திற்கு வந்தது. அப்போது அந்த கப்பல் மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து கப்பலில் இருந்த ராணுவ வீரர்கள் துறைமுகத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். ஏமனில் வசிக்கும் சீன மக்கள் கப்பலில் ஏறியதும் வீரர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.