எலிசபெத்தை ஏன் பிரிந்தேன்.. முறிந்த காதலுக்கு காரணங்களை அடுக்கும் வார்னே
லண்டன்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷான் வார்னே, நடிகை எலிசபெத் ஹர்லி இடையிலான காதல் முறிந்து பல நாட்களாகி விட்டது.
அதற்கான சரியான காரணத்தை இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த உறவை தொடர்ந்து பராமரிக்க முடியாமல்தான் இருவரும் பிரிந்து விட்டதாக தற்போது வார்னே மனம் திறந்து கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் இந்த இருவரின் காதலும் நீடித்தது. பின்னர் 2013ம் ஆண்டு இருவரும் ஆளுக்கு ஒருபக்கமாக செல்ல முடிவெடுத்து குட்பை சொல்லிக் கொண்டனர்.
டைம் மேகஸின் பேட்டி:
ஹர்லிக்கு 50 வயதாகிறது. வார்னேவுக்கோ 45 வயதுதான். இந்த நிலையில் டைம் மேகஸினுக்கு வார்னே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஹர்லியுடனான காதல் முறிவு குறித்தும் பேசியுள்ளார்.
அருமையான டின்னர் இரவுகள்:
"உறவுகள் எப்போதுமே கடினமானவைதான். உண்மையிலேயே கஷ்டமானது. ஆனால் அப்படி ஒரு நிலை வரக் கூடாது. இருப்பினும் எங்களுக்கு அப்படி ஒரு கஷ்டம் வந்தது.எங்களுக்குள் எப்போதுமே அருமையான டின்னர் இரவுகள் அமையும். அதேசமயம், அந்த இரவுகள் தொடர்ந்து நீடிக்கவில்லை.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு:
எங்களது வேலை வேறு பிரச்சினையாக இருந்தது. இருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்து விட்டோம். அதுவும் உறவில் சிக்கல் வர ஒரு காரணம்.
விவசாயி மட்டுமே:
அதேசமயம், அதனால் மட்டுமே எங்களது உறவு பிரியவில்லை.நாங்கள் முதன் முதலில் சந்தித்தபோது அவர் வேலை எதிலும் இல்லை. விவசாயியாக மட்டுமே இருந்தார். நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.
மாடலிங் உலகில் ஹர்லி:
பின்னர் ஹர்லி நடிக்கப் போனார். மாடலிங் செய்யப் போனார். டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நானும் மீண்டும் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன். எங்களுக்குள் நேரம் இல்லாமல் போனது.
அமெரிக்காவுக்கு பறந்தார்:
அவர் அமெரிக்காவுக்குப் போனார். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நானும் கிரிக்கெட் கமெண்டரி பக்கம் கவனம் செலுத்தினேன். என்னுடைய குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.
குழப்பமான காதல்:
மொத்தத்தில் எல்லாமே குழப்பமாகி விட்டது. இருவருக்கும் இது ஒரு பெரும் குழப்பமாக மாறிப் போனது. கஷ்டமாகி விட்டது. இதுவும் பிரிய முடிவு செய்ததற்கு ஒரு காரணம்" என்றார் அவர்.பிரிந்தாலும் கூட இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை. முன்பு காதலர்களாக சந்தித்தனர். இப்போது நண்பர்களாக சந்தித்துக் கொள்கிறார்களாம்.