”விமானத்தின் மேல் பழியைப் போட்டு எங்கள் உறவுகளை கொன்று மூழ்கடித்துவிட்டது மலேசியா” உறவினர்கள் கதறல்
கோலாலம்பூர்: "விமான விபத்திற்கு மலேசியாதான் முக்கிய காரணம்.மலேசிய அரசாங்கம்தான் எங்களது உறவுகளை அநியாயமாக கொன்றுவிட்டது.இறந்த எங்களது உறவினர்களை திருப்பி தாருங்கள்" என்று விமான பயணிகளின் உறவினர்கள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 17 நாட்களுக்கு முன் மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் நொறுங்கிக் கிடக்கிறது என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.
மேலும், விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் , இந்த விபத்து பற்றி விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தேடுதல் பணியை கைவிட்ட ஆஸ்திரேலியா:
இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தை தேடும் பணியை ஆஸ்திரேலியா கைவிட்டுள்ளது.மோசமான வானிலை காரணமாக தேடும்பணி நிறுத்தபட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.இந்த சூழ்நிலையில் தேடினால் தேடுதல் குழுக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
உயிரின் மதிப்பு கேவலம் 3 லட்சமா? :
மலேசிய விமான பலி யானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க இருப்பதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தேவைப்பட்டால் அதிக நிதி உதவி வழங்குவ தாகவும் தெரிவித்துள்ளது.
கொந்தளிக்கும் உறவுகள்:
இதை தொடர்ந்து ,மலேசிய விமானத்தில் பயணம் செய்த 153 சீன பயணிகளின் உறவினர்கள் கோபம் அடைந்து பீஜிங்கில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் , "மலேசிய அரசு திட்டமிட்டு எங்களது உறவினர்களை கொன்று விட்டது. எங்களது உறவினர்களை திருப்பி தாருங்கள்.மலேசிய விமானத்துறையில் அனைவரும் பொய்யர்கள்" என கோவமாக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
விமான பயணிகள்:
மாயமான மலேசிய விமானத்தில் 153 சீனர்கள்,38 மலேசிய பயணிகள்,7 இந்தோனேஷியர்கள்,6 ஆஸ்திரேலியன்,5 இந்தியர்கள், 4 பிரஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள்,3 அமெரிக்கர்கள், 2 நியூசிலாந்து,உக்ரைம், கனடா நாட்டை சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ரஷ்யா,தைவான்,நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் தலா ஒருவர். ஈரான் நாட்டை சேர்ந்த 2 பேர் இத்தாலியன் மற்றும் ஆஸ்திரியன் என போலி பாஸ் போர்ட்டில் பயணம் செய்து உள்ளனர்.
வலியை தந்த அறிவிப்பு:
இவ்விவகாரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் மலேசியா பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் பலர் சீனாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் இந்த அறிவிப்பு விமானத்தில் பயணம் செய்த சீனர்களின் உறவினர்களுக்கு பெரும் வலி நிறைந்ததாக உள்ளது.
தண்ணீர் பாட்டில் தாக்குதல்:
பீஜிங்கில் விமான விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் மலேசியா தூதரககம் முன்பு கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. தூதரகம் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திய உறவினர்கள் போலீஸ் அதிகாரிகளுடன் சண்டையில் ஈடுபட்டனர்.