எச்-1பி விசா இன்னும் அதிகமாக வழங்கப்படும்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
அமெரிக்காவில் எச்-1பி விசா இன்னும் அதிகம் வழங்கப்பட வேண்டும் என்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் எச்-1பி விசா இன்னும் அதிகம் வழங்கப்பட வேண்டும் என்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. குடியரசு கட்சியை சேர்ந்த இரண்டு பேர் இந்த மசோதாவை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
எச்-1பி விசா வாங்குவது இதனால் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது அங்கு இருக்கும் இந்தியர்களுக்கும், இனி அங்கு போக விரும்பும் இந்தியர்களுக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும்.
மேலும் எச்-1பி விசா முறைக்கு எதிராக பேசி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இது பெரிய பின்னடைவாக இருக்க போகிறது.
எச்-1பி விசா நடைமுறை
எச்-1பி விசா வைத்து இருப்பவர்களுக்கு வழக்கமான காலக்கெடுவைவிட 3 வருடம் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் 6 வருடம் அங்கு இருக்க முடியும். இவர்கள் அங்கே கிரீன் கார்ட் பெற்று அங்கேயே வசிக்க முடியும்.
அதிபர் எதிர்ப்பு
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார்.
மசோதா
தற்போது இதற்கு எதிராக அவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது 85,000 எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதை வருடத்திற்கு 1,95,000 விசாவாக அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க வகை செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கூடாது என்றும் கூறியுள்ளது.
பெருகும் ஆதரவு
இதற்கு அமெரிக்காவில் பெரிய நிறுவங்களான பேஸ்புக், மைக்ரோசாப்ட் எல்லாம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. அதேபோல் இது அமெரிக்காவில் இருக்கும் நல்ல பணியாளர்களை அதிகப்படுத்தும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியர்கள் இதனால் கண்டிப்பாக பலன் அடைவார்கள்.