அமெரிக்க இடைத் தேர்தலில் குடியரசு கட்சி அபாரம்!: ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவு!
வாஷிங்டன்: ஜனநாயக கட்சியை சேர்ந்த, அதிபர், பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்காவில், நாடாளுமன்றத்தின் ஒரு சபையான, பிரதிநிதிகள் சபையின், 435 இடங்கள், மொத்தம், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையின், 33 இடங்கள், 38 மாகாணங்களின் ஆளுநர்கள், 46 மாகாண தேர்தல், மாநகராட்சி தேர்தல் போன்றவற்றிற்கான தேர்தல்கள், முன்கூட்டியே நேற்று நடைபெற்றன.
இதில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
அதை தொடர்ந்து முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளன. அதில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்கன்சாஸ், கொலராடோ, மோன்டானா, சவுத் டகோட்டா மற்றும் விர்ஜினியா ஆகிய 5 மாகாண செனட் உறுப்பினர் பதவியை குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது.
கென்டக்கி செனட் உறுப்பினர் தேர்தலிலும் குடியரசு கட்சி வேட்பாளர் மெக்கோனல் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் அலபாமா, ஜார்ஜியா, கன்சாஸ், மின்னசோட்டா, மிஸ்சிசிப்பி, நெப்ராஸ்கா, ஒக்லாஹோமா, சவுத் கரோலினா மற்றும் டென்னிசே செனட் மாகாண செனட் உறுப்பினர் பதவிகளில் குடியரசு கட்சியினர் வெற்றி பெற்று தக்க வைத்து கொண்டனர்.
லூசியானாவிலும் குடியரசு கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் செனட் சபையில் மெஜாரிட்டி பெற்று அதிகாரத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர குடியரசு கட்சிக்கு இன்னும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தால் போதுமானதாகும்.
அதே நேரத்தில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் டெலாவர், மசாசூசெட்ஸ், நியூஜெர்சி மற்றும் ரோத்தீவு ஆகிய மாகாணங்களில் செனட் உறுப்பினர் பதவிகளில் வெற்றி பெற்று தக்க வைத்துள்ளனர். முக்கிய பகுதியான நியூ ஹாம்ப்ஷையர் செனட் பதவியை கைப்பற்றியுள்ளனர்.ஆளுநர் பதவிகளிலும் குடியரசு கட்சியினரின் கைகளே ஓங்கி உள்ளது. ஆர்கன்சாஸ்சில் குடியரசு கட்சி வேட்பாளர் ஆசா ஹட்சிங்கன் வெற்றி பெற்றுள்ளார். இதுபோன்று பல இடங்களில் இக்கட்சி முன்னிலை வகிக்கிறது.
இந்த இடைத் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஐனநாயக கட்சி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு ஒபாமா அரசின் பொருளாதார, பாதுகாப்பு கொள்கைகளே காரணமாக கூறப்படுகிறது. செனட் சபையில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவதால் எஞ்சியுள்ள இரண்டாண்டு பதவிக்காலத்தையும், குறைந்த அதிகாரத்துடனே கழிக்கும் நிலை ஒபாமாவுக்கு ஏற்பட்டுள்ளது.