அன்டார்க்டிக் ஐஸ் கட்டியில் சிக்கியுள்ள ஆய்வுக் கப்பல்... விஞ்ஞானிகளை மீட்கும் பணி தொடங்கியது
கான்பெரா: அன்டார்க்டிக்கின் ஐஸ் பிரதேசத்தில் சிக்கியுள்ள ரஷ்ய நாட்டுக் கப்பலில் சிக்கியுள்ள விஞ்ஞானிகளை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த கப்பல் அங்கு சிக்கியுள்ளது. அதில் உள்ள ஆய்வாளர்கள் குழு வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது ஒரு ஹெலிகாப்டரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். அதன் மூலம் கப்பலில் உள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள பகுதிக்கு இடம்மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய மீட்புக் குழு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடலோரப் பாதுகாப்பு ஆணையத்தின் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்தான் இந்த மீட்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
முட்டுக்கட்டையாக இருக்கும் கடல் பனிக்கட்டி
அந்தப் பகுதியில் உள்ள ஐஸ் கடல் பகுதியானது கப்பலை நெருங்க முடியாத அளவுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்ததால்தான் மீட்புப் பணிகள் தாமதமடைந்துள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
சீனத்து ஹெலிகாப்டர்
இருப்பினும், சீனாவைச் சேர்ந்த ஸ்னோ டிராகன் எனப்படும் பெரிய பெரிய ஐஸ் கட்டிகளை உடைப்பதில் திறமை கொண்ட நிறுவனம் ஒரு ஹெலிகாப்டரை மீட்புப் பணிக்காக அனுப்பி வைத்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் கப்பலுக்கு அருகே இறங்கியுள்ளது.
பயணிகள் மகிழ்ச்சி
இந்த ஹெலிகாப்டர் தற்போது கப்பலில் இருக்கும் குழுவினரை மீட்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதனால் கப்பலில் இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
12, 12 பேராக
கப்பலில் தற்போது 52 விஞ்ஞானிகள் கொண்ட குழு உள்ளது. இவர்களை 12, 12 பேராக ஹெலிகாப்டர் மூலமாக மீட்கவுள்ளனர். இந்த மீட்பு முயற்சி ஐந்து மணி நேரம் நடக்கும் என்று தெரிகிறது.
கப்பலுக்கு ஆபத்தில்லை
ஐஸ் கட்டிகளுக்கு மத்தியில் சிக்கி நின்றாலும் கூட கப்பலுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று தெரிகிறது. கப்பல் நகர முடியாவிட்டாலும் கூட அது மூழ்கும் அபாயத்தில் இல்லை. மேலும் அதில் போதிய அளவு உணவு, எரிபொருள் உள்ளிட்டவையும் உள்ளன. இதனால் கப்பலில் உள்ள 22 ஊழியர்களும் கப்பலிலேயே இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மானியாவுக்குப் பயணம்
கப்பலிலிருந்து மீட்கப்படும் விஞ்ஞானிகள் குழு ஆஸ்திரேலிாயவின் டாஸ்மானியா தீவுக்குக் கொண்டு செல்லப்படுவர்.
ரஷ்ய நாட்டுக் கப்பல்
அன்டார்க்டிக்கில் சிக்கியுள்ள கப்பல் ரஷ்யாவைச் சேர்ந்தது. அதன் பெயர் அகாடெமிக் ஷோகால்ஸ்கி என்பதாகும். பயணிகள் கப்பல் இது. கிறிஸ்துமஸ் தினத்தன்று இது ஐஸ் கட்டிகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டது. கடும் பனிப் புயல், காற்று, பனி மூட்டம், பெரிய பெரிய ஐஸ் கட்டிகள் ஆகியவை காரணமாக இந்தக் கப்பலால் தொடர்ந்து நகர முடியவில்லை.
ஐஸ் கட்டிகளை உடைப்பதிலும் சிக்கல்
ஐஸ் கட்டிகளை உடைக்க முதலில் 3 ஐஸ் பிரேக்கர்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.
டக்ளஸ் போன பாதையில்
கடந்த 1911 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டக்ளஸ் மாசன் என்பவர் அன்டார்க்டிகாவில் கப்பல் பயணம் மேற்கொண்டார். இது 1913ல் முடிவடைந்தது. அவர் போன பாதையில், அதே போல செல்லும் நோக்குடன்தான் இந்த ரஷ்யக் கப்பலில் விஞ்ஞானிகள் பயணப்பட்டு வந்தனர். ஆனால் கடலில் உறைந்து கிடக்கும் ஐஸ் கட்டிகளுக்கு இடையே அவர்களது கப்பல் சிக்கிக் கொண்டது.