வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!
வாட்ஸ் ஆப் குழுக்களை எளிதாக ஹேக் செய்ய முடியும் என ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: உலகில் தற்போது முக்கால்வாசி மக்கள் பயன்படுத்தும் முக்கியமான அப்ளிகேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். இதன் எளிமையான பயன்பாடு காரணமாக பலரும் இதை விரும்பி பயன்படுத்துகின்றனர்.
மற்ற அப்ளிகேஷன்கள் போல இல்லாமல் இது மிகவும் குறைந்த இணைய வேகம் இருந்தால் கூட நன்றாக வேலை செய்யும். இவ்வளவு பயன்கள் இருந்தும் தற்போது வாட்ஸ் ஆப் பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.
வாட்ஸ் குழுக்களில் யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்த அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் எடுக்க முடியும் என்று ஆய்வு ஒன்று குறிப்பிட்டு உள்ளது. இந்த சம்பவம் நிறைய பேருக்கு நடந்து இருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டு உள்ளது.
பிரச்சனை என்ன
தற்போது வாட்ஸ் ஆப் குரூப்களில் யாரை நினைத்தாலும் ஆட் செய்ய முடியாது. அட்மீன் நினைத்தால் மட்டுமே ஒரு நபரை குழுவில் சேர்க்க முடியும். ஆனால் சில ஹாக்கிங் முறைகளை பயன்படுத்தி எளிதாக நாம் நினைக்கும் நபர்களை வாட்ஸ் குழுவில் சேர்க்க முடியும். இது குழுவில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கூட பார்த்துக் கொள்ளலாம்.
என்ன ஆகும்
சில முக்கிய வாட்ஸ் ஆப் குழுக்களில் விவாதிக்கப்படும் விஷயங்களை கொள்ளையடிப்பதற்காக இந்த வேலை நடக்கிறது. மேலும் வாட்ஸ் ஆப்பில் சில தகவல்கள் பரவாமல் இருக்கவும் இந்த ஹாக்கிங் குழுக்கள் இந்த வேலையை செய்கிறது. மிகவும் எளிதாக இதை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
ஸ்விட்சர்லாந்த் ஆய்வு
ஜெர்மனியில் இருக்கும் 'ரூர்' பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் ஸ்விட்சர்லாந்தில் நடந்த ஆராய்ச்சி கருத்தரங்கம் ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். வாட்ஸ் ஆப்பில் இருக்கும் மோசமான பாதுகாப்பு காரணமாக இப்படி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் யாருடைய தொலைபேசி எண்ணையும் இதன் மூலம் திருட முடியும்.
வாட்ஸ் ஆப் மறுப்பு
வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே சமயத்தில் இந்த விஷயத்தை மிகவும் முக்கியமானதாக கருதுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து முறையான ஆராய்ச்சி செய்து முடிவுகள் அறிவிக்கப்படும், உண்மையிலேயே ஏதாவது பிரச்சனை இருந்தால் அது சரி செய்யப்படும் என்று கூறி உள்ளது.