பாரீஸ் தியேட்டரில் மக்களின் வயிற்றை கத்தியால் குத்திக் கிழித்த தீவிரவாதிகள்
பாரீஸ்: பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தவர்கள் இறந்துவிட்டதை உறுதி செய்ய கத்தியை வைத்து அவர்களின் வயிறை குத்திக் கிழித்தது தெரிய வந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் 6 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 129 பேர் பலியாகினர், 532 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாதிகள் சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டும், சில இடங்களில் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் தீவிரவாத தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த மரீஷா பெய்ன் உயிர் பிழைத்துள்ளார்.
படாகிளான் தியேட்டரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர் மூன்று மணிநேரமாக பாதாள அறையில் மறைந்திருந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தியேட்டரில் மக்களை தீவிரவாதிகள் சித்ரவதை செய்தனர் என்று எங்களுக்கு தெரியும். மக்கள் அலறும் சப்தம் கேட்டது. துப்பாக்கி குண்டு பாய்ந்தவர்கள் இறந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்ய தீவிரவாதிகள் கத்தியை வைத்து அவர்களின் வயிற்றை கிழித்தனர் என்றார்.