ஏமாற்றிய காதலனின் ”ஐ-போன்”,”மேக் புக்”கினை தண்ணீரில் போட்டு முக்கி பழி தீர்த்த காதலி!
டோக்கியோ: தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க அவரின் ஐ பேட், ஐ மேக், ஐ போன்களை தண்ணீர்தொட்டியில் தூக்கிப்போட்டு பெண் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார்.
கால மாற்றத்திற்கு ஏற்ப பழிவாங்கும் முறைகளும் மாறி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையின் உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளுக்கு அடுத்தபடியான முக்கிய தேவையாக இருப்பது ஸ்மார்ட் போன்களும், இசை கேட்க பயன்படும் கருவிகளும், கணிணிகளும் தான். ஒருவரை பழிவாங்க இவற்றையே ஒரு ஆயுதமாக பயன்படுத்த முடியும் என நிரூபித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த பெயர் தெரியாத பெண் ஒருவர்.
தனது காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை கண்டுபிடித்த அப்பெண், கட்டுக்கடங்காத கோபத்தில் அவரை பழிவாங்க முடிவு செய்தார்.
அதன்படி காதலனின் ஐ பேட், ஐ மேக், இரண்டு ஐ-போன்கள் மற்றும் ஒரு ஜோடி மேக்புக் ஆகியவற்றை தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசினார். பின்னர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அவற்றை தனது போனில் படமாகவும் எடுத்தார்.
அதன் பின் தன்னை மனரீதியாக இழப்பில் தள்ளிய காதலனை, பண ரீதியாக இழப்பில் தள்ளிய மகிழ்ச்சியில், தான் எடுத்த புகைப்படங்களை டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளார் அந்த பெண்.